
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் பகுதிக்குச் புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சென்றிருந்தார். அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அருகில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்த சிறுமியை அழைத்து, “படிக்கிற வயதில் கடையில் வேலை செய்றியேம்மா?, நீ படிக்கனும் உன்னை பள்ளியில் சேர்த்துவிடுறேன். தொடர்ந்து கல்லூரி படிக்கவும் நானே உதவி செய்றேன்” என்று கூறினார். அதோடு எதிரிலேயே உள்ள பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்குஅழைத்துச் சென்று 11ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
இந்த தகவல் அறிந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அனுமதியுடன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கருடன் சென்று மாணவியை இன்று நாம் சந்தித்த போது, மாணவி மாரிக்கண்ணு நம்மிடம், “எனக்கு சொந்த ஊர் வடவாளம் அருகில் உள்ள சின்னையாசத்திரம். எங்க அப்பா செல்லத்துரை - அம்மா முத்துலெட்சுமி. ஒரு அக்கா கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு அண்ணன் உடல்நலமில்லாதவர். சொந்த நிலம் இல்லாமல் அரசாங்க இடத்தில் வீடு கட்டி இருந்தோம். பட்டாவும் இல்லை அந்த வீட்டுக்கு மின்சாரம் கூட இல்லை. கூலி வேலை செஞ்சு தான் எங்களை காப்பாத்துனாங்க.
3 வருசத்துக்கு முன்னால எங்க அப்பா பாம்பு கடிச்சு இறந்துட்டார். 3 மாசம் முன்னால அம்மாவும் மஞ்சள் காமாலையால இறந்துட்டாங்க. இப்ப நானும் அண்ணனும் தாய் தந்தையை இழந்து ஆதரவற்று நிற்கும் போது எப்படி படிக்க முடியும். அதனால ரெண்டு பேரும் படிப்பை நிறுத்திட்டு கூலி வேலைக்கு போறோம். சொந்தக்காரங்க தான் ஆதரவு. நான் எலக்ட்ரிக்கல் கடையில வேலை செயறதைப் பார்த்த எம்.எல்.ஏ. சார் என்னை அழைத்து விசாரித்தார். 10 ஆம் வகுப்பு படிச்சுட்டு குடும்ப சூழ்நிலையால படிக்காம வேலைக்கு வருவதை சொன்னேன்.

உனக்கு உதவி செஞ்சு படிக்க வைக்கிறேன்னு பள்ளியில சேர்த்துவிட்டார். எம்.எல்.ஏ. சார் என்னை படிக்க பள்ளிக்கூடத்தில் சேர்த்துட்டார். ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனால் எங்க வீட்டுக்கு பட்டாவும், கரண்டும் யாரு கொடுப்பாங்க?” அண்ணா என்று கண்கலங்கி நின்ற மாணவியை ஆறுதல் கூறி தேற்றினார் பள்ளித் தலைமை ஆசிரியர். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்தால் தாய் தந்தையை இழந்து ஆதரவற்று வாழும் சிறுமிக்கு வீட்டுமனைப் பட்டாவும், மின் இணைப்பும் கிடைக்கும்.