
திண்டுக்கல் மாநகராட்சியின் மதிமுக மாமன்ற உறுப்பினராக காயத்ரியும், திமுக மாமன்ற உறுப்பினராக சுபாஷினியும் இருந்து வருகிறார்கள். திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டிக்கு வேலை நிமித்தமாகச் சென்று விட்டு மதியம் 2 மணி அளவில் வெள்ளோடு வழியாக வண்ணத்துச் சின்னப்பர் கோவில் அருகே வந்தனர். அப்போது முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கவுன்சிலர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து அவர்கள் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடினர்.
திருடர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாததால் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மதிமுக, திமுக கவுன்சிலர்களின் கைப்பையைப் பிடுங்கி தப்பி ஓடும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று தனியே இரண்டு பெண்கள் வெளியே நடமாட முடியாத அவல நிலை இந்த ஆட்சியில் அரங்கேறி வருகிறது எனப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதிலும் சமூகப் பொறுப்பில் இருக்கக் கூடிய பெண்களை குறி வைத்து முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை அடித்து செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வார்டு கவுன்சிலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக கவுன்சிலர் கேள்வி எழுப்புகிறார்.