Skip to main content

ப.சிதம்பரத்தை கைது செய்துவிட்டு காரணத்தை தேடி வருகிறது சிபிஐ- கே.எஸ்.அழகிரி பேட்டி

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

வேளாண் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, குறைந்த வட்டியில் வங்கிகள் விவசாய கடன் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் இன்று கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மேட்டூர் அணையிலும், வீராணம் ஏரியிலும் தண்ணீர் அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. தற்போது தண்ணீர் திறந்து விட்டால்தான் உளுந்து சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும்.

 

ks azhagiri interview

 

முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் அந்நிய மூலதனம் பெற்றுவந்தால் மகிழ்ச்சிதான். சென்னையில், 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் எவ்வளவு மூலதனம் கிடைத்துள்ளது, எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகள் துவங்கியுள்ளது என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது 2 யூனிட்டை தமிழகத்தில் துவங்காமல் ஆந்திரா, ஹரியானாவிற்குச் செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை தக்க வைக்க முடியாதவர்களால் வெளிநாட்டிற்குச் சென்று முதலீட்டை ஈர்க்க முடியுமா?

இந்த காலாண்டில் ஜிடிபி 5 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும். 3.50 லட்சம் பேர் ஆட்டோமொபைல் தொழிலில் வேலை இழந்துள்ளனர். பிஸ்கெட் நிறுவனத்தில் 10 ஆயிரம் ஒரே நாளில் வேலை இழந்துள்ளனர். இது மோடி ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி சுனாமியாக உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி என்று தவறுக்கு மேல் தவறு செய்து பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். 

மத்திய ரிசர்வ் வங்கியில் ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசு எடுத்துள்ளது. இது போர்க் காலம், அரசு திவாலாவது, டாலருக்கு நிகரான மதிப்பு குறையும் போது மட்டுமே எடுக்க வேண்டிய பணமாகும். அரசின் அன்றாட செலவுகளுக்கு இதனை எடுக்கக் கூடாது. தற்போது, தவறான பொருளாதார கொள்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எடுத்துள்ளார்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விளைவால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறோம். விவசாயிகளுக்கு கடன்  எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 16 தனியார் வங்கிகளை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தேசிய மயமாக்கினார். ஆனால், இப்போது, வங்கிகள் இணைப்பால் விவசாயிகளுக்கு கடன் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 2 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு சலுகை வழங்கினால் மட்டுமே நாடு பஞ்சத்திலிருந்து மீளும். அவர்களுக்கான காப்பீட்டையும் அரசே ஏற்க வேண்டும்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விட்டு தற்போது காரணத்தை தேடி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தவறுகளை சிதம்பரம் மட்டுமே வெளிப்படையாக பேசுவதால் இந்த பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் தமிழிசைசௌந்தரராஜன் தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், தெற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி, நகர தலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்