Skip to main content

நாங்கள் வீதிக்கு வந்தது ஏன்? தமிழக அரசை கண்டிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் 

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
11


திடீரென சைக்கிள்களை நடுரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர் மாணவ-மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு தனியாக வகுப்பறை இதுநாள் வரையிலும் அமைக்கப்படவில்லை. அந்த மாணவர்களை பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமரவைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கரும்பலகை இல்லாத காரணத்தினால் பள்ளியின் கட்டிட வெளிப்புற சுவர்கள் கரும்பலகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெயிலில் அமரமுடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
 

 

 

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் திடீரென சைக்கிள்களை நடுரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள்தான் இதனை செய்தது. 
 

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, இந்த பள்ளியில் 678 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக இருந்து தற்போது தமிழக அரசால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் +1, +2 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால் அவர்கள் அமர போதுமான கட்டிட வசதி இல்லை. பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகம் இல்லை. இதனால் செய்முறை பயிற்சிக்காக மாணவ மாணவிகள் பஸ்சில் கட்டணம் செலுத்தி ஜெயங்கொண்டம் அரசு பள்ளிக்கு சென்று செய்முறை மேற்கொள்கின்றனர். தங்களுக்கு அறிவியல் ஆய்வக கட்டிடமும் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடந்த 3 நாட்களாக குடிநீர் இல்லை. பல்வேறு குறைபாடுகள் உள்ளதால் மாணவ மாணவிகள் ஆத்திரமடைந்தனர் என்றனர். 
 

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
 

 

 

வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை அறிவித்து விடுவதாகவும், இரண்டு ஆண்டுகள் ஆகியும் வகுப்பறை கட்ட எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்காததால் நாங்கள் வீதிக்கு வந்தோம். மேலும் பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் பள்ளியை விட்டு வெளியில் வந்து மறைவான இடம் தேடி செல்ல வேண்டி உள்ளதாகவும், மாணவிகள் இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினர்.
 

பள்ளியில் பொருளியியல் பாட திட்டத்திற்கு அரசு ஆசிரியர் இல்லை என்றும், தற்காலிக ஆசிரியருக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் நபர் ஒவ்வொருவரும் ரூ.200 கொடுத்து படிப்பதாகவும், அவர்கள் கொடுக்கும் தொகையே அந்த ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால் அவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது என்றனர்.
 

சம்பவ இடத்திற்கு தா.பழூர் போலீசார் மற்றும் வட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 

இதையடுத்து அதிகாரிகள் பள்ளி கட்டிடம் கட்டி தருவதாகவும், மற்ற கோரிக்கைகள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 
 

 


 

சார்ந்த செய்திகள்