
சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மகளிர் பள்ளி வாயிலில் மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கோவிலை அகற்ற ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட சீர்காழி செல்லும் சாலையில் அரசு நந்தனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை ஆதிதிராவிட நலத்துறை நிர்வகித்து வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதி மற்றும் பள்ளி விடுதி உள்ளது.
இந்த நிலையில் இந்தப் பள்ளியின் பிரதான வாயிலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக செங்கல்லை நட்டு கோவிலாக வழிபட்டு வந்தனர். இது நாளடைவில் சிலை வைத்தும் பின்னர் கீத்து கொட்டகை அமைத்தும் தற்போது சிமெண்ட் கற்களை கொண்டு சுவர் கட்டி உள்ளனர். இதனால் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு இந்தக் கோயிலால் மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்து கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தனர்.

அதன் பெயரில் விசாரணை மேற்கொண்ட சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமார் இந்த கோவில் மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதை உணர்ந்து கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனையொட்டி திங்கள்கிழமை பள்ளிகள் திறந்த நாளில் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் சத்தியான் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் கோவிலை அகற்ற முடியவில்லை. இந்த கோவிலால் பல்வேறு விபத்துக்கள் நடைபெற்று உள்ளது எனவே பெரும் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மாணவிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கோயிலை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.