
பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று (29.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் சோழிங்கநல்லூரில் அன்புமணி இன்று (30.05.2025) முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பாமகவின் முன்னாள் எம்எல்ஏவும் பெண் நிர்வாகியுமான ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''ராமதாஸை நிர்ப்பந்தத்தின் காரணமாக சூழ்நிலைக் கைதியாக அவரை பயன்படுத்தி வருகிறார்கள். யாரோ சொல்லிக் கொடுத்ததை எழுதிக் கொடுத்ததை சொல்லி இருக்கிறார். அவர் நிச்சயமாக தன் பிள்ளையை அப்படி பேசியிருக்க மாட்டார். அதேபோல பாட்டிலால் அடித்தார்கள் பாட்டிலால் அடித்தார்கள் என தலைப்புச் செய்தியாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது நல்லா இருக்கிறதா?
ராமதாஸ் வீட்டைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். சத்தியமாக சொல்கிறேன் வெள்ளிக்கிழமை அதுவுமாக சொல்கிறேன் அன்புமணி அப்படி பண்ணவில்லை. யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஏதோ கோபத்தில் யாரோ அடித்ததை அன்புமணி அடித்ததாக சொல்லி வருகிறார்கள். ராமதாஸை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அன்புமணி மத்திய அமைச்சராக வந்து 108 ஆம்புலன்ஸ் விட்டார், புகையிலை, பான்பராக் எல்லாம் ஒழித்தார். கஞ்சா வந்த பிறகு நாடே நாசமாகியது. எத்தனை பாலியல் குற்றங்கள்; எத்தனை கொள்ளைகள், திருட்டுகள் எல்லாம் நடைபெறுகிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு பாமகவை பற்றியே பேசுகிறார்கள்'' என்றார் ஆதங்கமாக.