கரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு நேற்று 231 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கை நீட்டித்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "வீடுவீடாக சென்று கரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை கரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நமக்கு கரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது. கரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும். சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன" என தெரிவித்துள்ளார்.