Skip to main content

இறந்த பிறகு வாழப் போகிறார்! எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்!

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
Prabhanjan



இறந்த பிறகு வாழப் போகிறார் என எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 
 

எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழுக்கென்றே தன்னைத் தாயாரித்துக்கொண்டவர். எழுத்தெண்ணித் தமிழ்படித்துக் கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர். புலவர் பட்டம் என்ற வட்டம் பலபேரால் தாண்டவியலாதது. அதைத்தாண்டி நவீன இலக்கியத்திற்காகத் தன்னை வார்த்துக்கொண்டவர். நா.பார்த்தசாரதிக்குப் பிறகு பண்டித மரபு தாண்டிப் படைப்பிலக்கியத்திற்கு வந்தவர் பிரபஞ்சன். கள்ளுக்கடை வைத்திருந்த தந்தைக்குப் பிறந்தவர் கவிதைக்கடை வைத்ததுதான் இலக்கிய ஆச்சரியம்.

 

சமரசம் இல்லாத படைப்பாளி அவர். மானுட யாத்திரையைத் தடுக்கும் பிற்போக்குக் கோடுகள் அகற்றப்பட வேண்டும் அல்லது அகலப்படுத்தப்பட வேண்டும் என்பது பிரபஞ்சனின் இலக்கியக் கொள்கை. இருள்கட்டிக் கிடக்கும் மனித மனங்களுக்குள் மெல்லிய மெழுகுவத்தியை ஏற்றிவைத்தை எழுத்து பிரபஞ்சன் எழுத்து. அவரது வானம் வசப்படும் என்ற நாவலும், நேற்று மனிதர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும், முட்டை என்ற நாடகமும் நீண்ட காலங்கள் நினைவிலிருக்கும்.

 

இருக்கும்போது செத்துச் செத்து இறந்தபின் வாழ்கிறவன்தான் எழுத்தாளன். உடலென்ற கூடு உடைந்தபிறகும் என் எழுத்தில் நான் உயிரோடிருப்பேன் என்ற சின்னத்தனமான ஒரு கர்வம்தான் எழுத்தாளனை எழுதவைக்கிறது. அதே நம்பிக்கையில் 73 வயது வரையில் இயங்கி வந்த பிரபஞ்சன் இதோ இப்போது இறந்துவிட்டார்; அவரது எழுத்து வாழப்போகிறது.

 

மறதி அதிகமிக்க மகாயுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் எழுத்தாளனையாவது நீண்ட காலம் நெஞ்சில் நிறுத்துவோம். அவரை இழந்து வாடும் உறவுகளுக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.