ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியன்-2 படத்தின் இணை இயக்குனர் குமார் அளித்த புகாரின் பேரில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை, கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.