Skip to main content

தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைவு;  இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

pmk Ramadoss insists on compensation to farmers

 

“தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி படுகையின் பிற மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால், 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் கருகியுள்ள நிலையில், கூடுதலாக மூன்றரை லட்சம் ஏக்கரில் விளைச்சலும் குறைந்திருப்பது காவிரிப் படுகை உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை இல்லாத அளவில் உழவர்கள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் கிடைக்காததாலும் காவிரிப் படுகை உழவர்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டனர்.

 

குறுவை சாகுபடி தொடங்கிய காலத்திலிருந்தே தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே காவிரி நீர் சென்றடையவில்லை. அதனால், சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகி உழவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இது தவிர இன்னொரு வகையிலும்   உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தான் புதிதாக தெரியவந்திருக்கும் செய்தி ஆகும்.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 96,215 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிவடைந்திருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் கிடைத்த நெல் விளைச்சல் குறித்து ஆய்வு செய்த போது தான், விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 2.4 டன் நெல் கிடைக்கும். கடந்த ஆண்டு அதே அளவு தான் விளைச்சல் கிடைத்தது. ஆனால், இந்த முறை சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1.69 டன் என்ற அளவிலேயே உள்ளது. தண்ணீர் சென்று சேராத சில கடைமடை பாசனப் பகுதிகளில் 1.02 என்ற அளவில் தான் மகசூல் கிடைத்துள்ளது. பிற காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் இதைவிட மோசமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் குறைந்ததற்கு முதன்மையான காரணம் மேட்டூர் அணையிலிருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாதது தான். மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி முதல் 18,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டால் தான், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாகவும், பின்னர் 8000 கன அடி, 6500 கன அடி, 3500 கன அடி என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விட்டது. நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் தான் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்ததால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் குறுவை சாகுபடியின் முடிவை ஆய்வு செய்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தான் உழவர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய 7 ஆண்டுகளில்  காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் கடுமையான இழப்பை மட்டுமே சந்தித்துள்ளனர். நடப்பாண்டிலும்  2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் கருகியது, மீதமுள்ள பகுதிகளில் மகசூல் குறைந்தது என உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடிக்காக செய்யப்பட்ட செலவைக் கூட அவர்களால் எடுக்க முடியாது என்பதால், இந்த ஆண்டு உழவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

 

எனவே, தண்ணீர் இல்லாதால் கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன், தண்ணீர் இல்லாததால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கும், பாதிப்பின் அளவுக்கு ஏற்ற வகையில் அதிக அளவாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.