Skip to main content

நிலத்தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன், அண்ணி கைது!  

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

 

NAMAKKAL DISTRICT INCIDENT POLICE ARRESTED

 

நாமக்கல் அருகே, நிலத்தகராறில் உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல், அண்ணனும், அண்ணியும் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பழனிவேலுவின் தம்பி அண்ணாத்துரை (வயது 50). இவரும் அதே பகுதியில்தான் வசித்து வந்தார். இவருடைய மனைவி கனகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு உள்ளூரில் சொந்தமாக 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதைப் பாகம் பிரிக்காமல் அண்ணன், தம்பி இரு குடும்பத்தினரும் கூட்டுப்பட்டாவாக விவசாயம் செய்து வந்தனர்.

 

இதற்கிடையே, தம்பிக்குத் தெரியாமல் கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்தை, பழனிவேல் தனது மனைவி பழனியம்மாள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாறுதல் செய்துள்ளார். அந்த நிலத்தின் பெயரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடனும் பெற்றிருந்தார். அண்மையில், அரசின் உத்தரவால், அவருடைய விவசாயக்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் இந்த விவரங்கள் அண்ணாத்துரைக்கு தெரியவந்தது. இதுகுறித்து பழனிவேலுவிடம் அவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டு, சமரசம் செய்துவைக்க முயன்றனர். ஆனால் அண்ணன், தம்பிக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

 

இந்த நிலையில்தான் மார்ச் 24- ஆம் தேதியன்று, கல்யாணி பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்துள்ளது. அன்று இரவு அண்ணாத்துரை தோட்டத்தில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த பழனிவேல், அவருடைய மனைவி பழனியம்மாள் தோட்டத்திற்குச் சென்று அண்ணாத்துரையிடம் தகராறில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் இருவரும் சேர்ந்து பழனிவேலுவை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணாத்துரை மூர்ச்சையாகி கீழே சரிந்து விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அவர்கள், அண்ணாத்துரையின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தனர். இச்சம்பவத்தில் தலை நசுங்கிய அண்ணாத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

 

இதையடுத்து பழனிவேலுவும், பழனியம்மாளும் எதுவுமே நடக்காததுபோல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 

காவல் ஆய்வாளர் குமரவேல்பாண்டியன் மற்றும் காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன் தம்பிக்குள் நிலத்தகராறு இருந்து வந்ததும், சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து பழனிவேலுவும், அவருடைய மனைவியும் திடீரென்று தலைமறைவாகி விட்டதும் காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், நாமக்கல்லில் ஓரிடத்தில் பதுங்கி இருந்த பழனியம்மாள், பழனிவேலு ஆகிய இருவரையும் மார்ச் 25- ஆம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கூட்டுப் பட்டாவில் இருந்த மொத்த நிலத்தையும் தாங்களே அபகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் அண்ணாத்துரையை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்