Skip to main content

புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை தூள்களாக்கும் நவீன இயந்திரம் வேண்டும்...விவசாயிகள் கோரிக்கை!!

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களை வெட்டி அகற்றுவது சிரமமாக இருப்பதால் மரங்களை தூள்களாக அரைக்கும் நவீன இயந்திரம் கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிக்கு அரசு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

kaja

 

நவம்பர் 16 ந் தேதி அதிகாலை வீசிய கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை, தேக்கு, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் அடியோடு சாய்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் தோட்டங்கள் முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் தோட்டங்களை சீரமைத்து மறுபடியும் மரக்கன்றுகள் நடவு செய்ய முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் தென்னை போன்ற மரங்களை வெட்டி அகற்ற செலவு அதிகமாக உள்ளதாலும் வெட்டப்படும் மரங்களை எங்கே போடுவது என்ற நிலையில் அனைத்து தோட்டங்களிலும் தென்னை மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. 

 

 

ஒரு சில சாலையோர தோட்டங்களில் செங்கல் சூளை, மற்றும் காங்கிரீட் பலகைக்காக மதுரை, தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்றாலும் அதன் பிறகு தென்னை மரங்களின் அடி, மற்றும் நுணி பகுதிகளை அகற்ற முடியாமல் தோட்டங்களிலேயே கிடக்கிறது. கிராமங்களுக்குள் உள்ள தோட்டங்களில் யாரும் மரங்களை வெட்டி எடுத்துச் செல்லவும் முன்வரவில்லை. 

 

இந்த நிலையை பார்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெய்வத்தளியில் உருவான நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவினர் ஒரு சில தோட்டங்களில் கிடக்கும் மரங்களை வெட்டி அகற்ற அந்தந்த தோட்டங்களின் வரப்புகளில் வைத்து வருகின்றனர்.

 

kaja

 

ஆனால் தற்போது தென்னை மரங்களை நவீன இயந்திரங்கள் மூலம் தூள்களாக்கி அகற்றும் பணிகள் டெல்டா மாவட்டங்களில் வந்துள்ளது. அதனால் அந்த நவீன இயந்திரம் கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் இலவசமாக அனுப்பினால் விரைவில் தோட்டங்களில் கிடக்கும் தென்னை மரங்களை அகற்றி மறுநடவுக்கு தோட்டங்களை தயார் செய்யலாம் என்கின்றனர் விவசாயிகள்.

 

 

இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும்போது.. தோட்டங்களில் விழுந்துகிடக்கும் தென்னை மரங்களை வெட்டி அகற்ற ஒரு மரத்திற்கு ரூ. ஆயிரம் வரை செலவாகிறது. மேலும் அதற்கான ஆள் பற்றாக்குறையும் உள்ளது. அப்படியே வெட்டி அகற்றினாலும் தோட்டங்களின் வரப்புகளில் மட்டுமே குவித்து வைக்க வேண்டியுள்ளது. 

 

ஆனால் வெளிநாடுகளில் இதுபோல சாய்ந்த தென்னை மரங்களை அகற்ற நவீன இயந்திரம் உள்ளது. அதாவது சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அந்த இயந்திரத்திற்குள் விட்டால் கதிர் அடிப்பது போல மரங்களை மரத்தூள்களாக வெளியே தள்ளுகிறது. அந்த தூளை தோட்டங்களில் உரமாகவும் பயன்படுத்தலாம். மரங்கள் மற்றும் மட்டைகளையும் தூள்களாக்குகிறது. அந்த இயந்திரம் டெல்டா பகுதியில் சோதனையும் செய்யப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்களை விவசாயிகள் வாங்க முடியாது. அதன் விலை அதிகமாக உள்ளது. அதனால் தமிழக அரசு தென்னை மரங்கள் அதிகம் சாய்ந்துள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இயந்திரத்தை இலவசமாக அனுப்பினால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விழுந்துகிடக்கும் தென்னை மரங்களை அகற்றி மறுபடியும் கன்றுகள் நடவு செய்ய வசதியாக இருக்கும் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.