Skip to main content

“எனது மனைவி உயிரோடு இருக்கும்போது...” -  கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Minister CV Ganesan burst into tears on the platform thinking of his wife

கடலூர் மாவட்டம் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் சி.வி. கணேசன், அவரது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2000 விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி சிறப்பித்தார். இதற்கான நிகழ்ச்சி கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன பெருந்துட்ட வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் உதவியுடன் இந்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. நிர்வாக பொறுப்பு அதிகாரி பாலச்சந்தர் நிர்வாக தலைவர் பிரசன்ன குமார், வெங்கடேஸ்வரா கல்விக் குழும தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் அவர்கள் தொகுதியில் உள்ள 2000 விதவை தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார். 

தையல் இயந்திரம் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், “மனைவி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு வருவதை உணர்கிறேன். அதேபோல் தொகுதியில் கணவரை இழந்து வாடும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதையும் உணர்ந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் 2000 விதவை தாய்மார்களுக்கு தையல் இயந்திரத்தை வழங்கி உள்ளேன். திட்டக்குடி தொகுதியில் சுமார் 8000 விதவை தாய்மார்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.

எனவே அப்படிப்பட்ட அனைவருக்கும் எனது சொத்தை விற்றாவது தையல் இயந்திரம் வழங்க உள்ளேன். காரணம் எனது மனைவி உயிரோடு இருக்கும்போது மனதில் கஷ்டங்கள் சங்கடங்கள் இருந்தாலும் அதை போக்கும் வகையில் அதிக நேரம் அவர் இந்த தையல் இயந்திரத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார். அதோடு அவர் என்னிடம், உங்களை நம்பி உள்ள திட்டக்குடி தொகுதி மக்களை கைவிட்டு விடக்கூடாது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுவார். அப்படிப்பட்ட மனைவி இல்லாமல் நான் கஷ்டப்படுவதை உணர்கிறேன். அதேபோல் கணவரை இழந்து கஷ்டப்படும் தாய்மார்களின் கஷ்டத்தைப் போக்க பெரும் உதவியாக இருக்கும்  என்று அனைவருக்கும் தையல் இயந்திரம் வழங்குகிறேன்” என்று கூறியபடியே கண்ணீர் விட்டு அழுதார் அமைச்சர்.

அதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த பெண் பயனாளிகள் அனைவரும் கண் கலங்கினர். அதோடு அனைவரும், ‘நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கண்கலங்கி கஷ்டப்படக் கூடாது..’ என்று ஆறுதல் கூறினார்கள். நெகிழ்ச்சி பொங்க நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் ஒன்றிய செயலாளர், மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.