Skip to main content

'மிக்ஜம்' புயல் எதிரொலி; சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தப் புயல் எதிரொலி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய விட்டு கனமழை பொழிந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 21 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 11.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலந்தூரில் 7 சென்டிமீட்டர் மழையும், ராயப்பேட்டையில் 6.6 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 13 சென்டி மீட்டர் மழையும், ஊத்துக்கோட்டையில் 12 சென்டி மீட்டர் மழையும், பொன்னேரியில் 10 சென்டி மீட்டர் மழையும்பொழிந்துள்ளது. திருவள்ளூர், சோழவரம், திருத்தணி, தாமரைப்பாக்கம், ஆவடியில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி, ஜமீன் கொரட்டூரில் தலா ஆறு சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், மணவாளநகர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், வேப்பம்பட்டு, செவ்வாய்பட்டு, திருமழிசை, வெள்ளவேடு, தாமரைப்பாக்கம், வெங்கல், பூண்டி சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பொழிந்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்