Skip to main content

அம்பேத்கர் படம் வைக்க தடை; 144 உத்தரவால் போராட்டக்களமான மயிலாடுதுறை ஆட்சியரகம்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடே நேற்று அனுசரித்து வந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் அவரது படம் வைக்ககூடாது என 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை கண்டித்து வி.சி.க.வினர் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்கச்செய்தனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி கடைவீதியில் கடந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் வி.சி.க. மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்த ஆயத்தமாகினர். படம் வைப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கலவரத்தைத் தூண்டி கல், கம்பு மற்றும் கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

 

ஆனாலும் அம்பேத்கர் படத்தை பட்டவர்த்தி பகுதியில் வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தை நடத்தினர். அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதோடு நீதிமன்றத்திற்கும் சென்றார். இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அந்த பகுதியில் அம்பேத்கரின் படம் வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

 

இந்த நிலையில், இந்த ஆண்டு அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு முந்தைய நாளே அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து விசிகவினர் போராட்டத்தில் இறங்கினர்.

 

இதுகுறித்து விசிகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தால் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பட்டவர்த்தி மதகடி பகுதியில் கொண்டாட முடியாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் மாவட்ட நிர்வாகமே தலைஞாயிறு மதகடி பகுதியில் அம்பேத்கருக்கு மரியாதை செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் நாங்கள் நிகழ்ச்சியைக் கைவிட்டோம். ஆனால், உடன்படிக்கை படி நடக்காமல் இன்று (டிச. 6) அம்பேத்கர் நினைவு தினத்தில் தலைஞாயிறு மதகடி பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.   

 

நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி கேட்ட பொறுப்பாளர்களுக்கு எந்தத் தகவலும் அளிக்காமல், நள்ளிரவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. அரசு உடனடியாக இந்தப் பிரச்சனை தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

அதோடு மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் போராட்டத்தைத் துவங்கினார். இரவு பத்து மணி வரை தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில், கடந்த ஆண்டு உத்தரவாதம் கொடுத்தபடியே அரசு சார்பில் அம்பேத்கரின் படத்தை வைத்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.