Skip to main content

தட்டிக்கேட்கும் திராணி உள்ள ஒரே கட்சி தி.மு.க.: தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத இயக்கமாக செயல்படும்: கனிமொழி எம்.பி.

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

 

kanimozhidmk


ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளை அருகே அண்ணா நகர் பெரியார் திடலில் 2 நாட்கள் நடந்தது. இதில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார். 
 

அப்போது அவர் கூறியதாவது:-
 

தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் முதன் முதலாக நடக்கும் மாநாடும், செயல் திட்டமும் ஈரோட்டில் இருந்து தொடங்குகிறது. திராவிடம் விழித்து கொண்டது என தனது 13 வயதில் திமுக தலைவர் கலைஞர் எழுதினார். கலைஞரின் பேச்சும், எழுத்தும் தமிழக மக்களின் வாழ்வுக்காக சுயமரியாதை உணர்வை ஊட்டுவதாக இருந்துள்ளது. இன்று அவர் சற்று அமைதியாக இருந்தாலும் அவரது எழுத்தும், பேச்சும்தான் இன்று வரை நம்மை வழி நடத்துகிறது.
 

விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோரின் கொடூரமான நிலை, சாதி, மூடநம்பிக்கை ஒழிப்பு என அனைத்து பிரச்சினைகளை பற்றி கலைஞர் பேசவும், எழுதவும் அஞ்சியதில்லை. விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயை கலைஞர் தள்ளுபடி செய்தார். ஆனால், டெல்லியில் மாதக்கணக்கில் போராடிய விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு ஒரு நிமிடம் நேரமில்லை. பல நாடுகளுக்கு செல்ல நேரம் இருந்த பிரதமருக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லாதது, சிந்திக்க வேண்டியது. ஆனால், மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்று விவசாயிகளை சந்தித்து குரல் கொடுத்தார்.
 

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் பிரச்சினைக்காக போராடும் உழைப்பாளியாக கருணாநிதி வழியில் இன்று ஸ்டாலின் உள்ளார். சில நாட்களுக்கு முன், 15-வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டபோது, பல மாறுதல் கொண்டு வரப்பட்டது. அதில், முக்கியமான மாறுதலாக, ‘மக்கள் தொகை குறைவாக இருக்கும் மாநிலத்துக்கு, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறையும்’, ‘மக்களுக்காக பாடுபட்டு, தனி நபர் வருவாய், தொழில் வளம், கல்வி தரம் உயர்த்தி, வேலை வாய்ப்பை உயர்த்தி இருந்தால் அந்த மாநிலத்துக்கும் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதித்தொகை குறைக்கப்படும்’ என்று கொண்டு வரப்பட்டு உள்ளன. நன்றாக உழைத்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை விதிப்பதாக உள்ளது.
 

இதை எதிர்த்து முதல் கடிதத்தை ஸ்டாலின்தான் அனுப்பினார். இதை எதிர்க்க, அ.தி.மு.க., அரசுக்கும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியவில்லை. அந்த அரசை வழிநடத்தும் பணியும், ஸ்டாலின் தலையில்தான் விழுந்து உள்ளது. மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதை தொடர்ந்து பல மாநிலங்கள், மத்திய அரசிடம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளது.
 

இந்தியாவை வழிநடத்தும் மாநிலமாக தமிழகத்தை மு.க. ஸ்டாலின் மாற்றி உள்ளார். இதுபற்றி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது மு.க.ஸ்டாலின் நாங்களும் கடிதம் எழுதுவோம் என்றார். இந்த அளவுக்கு அலட்சியமாக தமிழக அரசு, மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது.
 

டெல்லியில் தமிழகத்தை அடகு வைக்கும் நிலை, நசுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கு வேண்டாம் எனக்கூறும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு என பல திட்டங்கள் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள தொழிலை நசுக்கியதால், பலரும் வேலை இழந்து உள்ளனர்.
 

தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என நினைத்து, இந்த ஆட்சியிலேயே நிறைவேற்ற மத்திய அரசு செயல்படுகிறது. தமிழக மக்களுக்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் எதிர்க்கும் முதல் குரலாக, மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
 

வெளிநாட்டில் இருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வந்து, இந்தியாவில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார். ஆனால் இன்று நமது பணத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களுக்கு உடந்தையாக மத்திய அரசு செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
 

இதை தட்டிக்கேட்கும் திராணி உள்ள, ஒரே கட்சியாக தி.மு.க. இருக்கிறது. தமிழகத்துக்குள் பா.ஜ.க. நுழைய முடியாத இயக்கமாகவும், அரணாகவும் தி.மு.க., செயல்படும். இதுபோன்ற சதிகளை தகர்த்து தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசாக தி.மு.க.வை கொண்டு வருவோம்.
 

இவ்வாறு அவர் பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.