கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி கிராமத்தில் மர்மவிலங்கு கடித்து பசுமாடு உயிரிழந்தது. சிறுத்தை கடித்து உயிரிழந்தாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் மர்மவிலங்கின் கால்தடத்தை ஆய்வு செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே அகரஆலம்படி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் தனசேகரன்(52), விவசாயக்கூலி தொழிலாளி. இவர் வீட்டில் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். பசுமாட்டை வீட்டின் பின்பக்கத்தில் கட்டி வைப்பது வழக்கம்.
![Mysterious animal... The public fears](http://image.nakkheeran.in/cdn/farfuture/yexuhRl1aSi1BwLdKLcuH9WbqxitBzQ8IATI0Qnbl54/1576553462/sites/default/files/inline-images/a1212_0.jpg)
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்கம் கட்டியிருந்த பசுமாட்டை மர்மவிலங்கு ஒன்று கழுத்தை கவ்வி கடித்து குதறியுள்ளது. இதனால் பசுமாடு சம்பவ உயிரிழந்துள்ளது. நள்ளிரவில் பசுமாட்டுக்கு வைக்கோல் போட தனசேகரன் சென்றுள்ளார். அப்போது பசுமாடு ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சேத்தியாத்தோப்பு போலீஸாருக்கு தகவல் தந்தார்.
நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மாட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனசரக அலுவலர் சரவணகுமார் மற்றும் வனத்துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்து கிடந்த பசுமாட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த மர்ம விலங்கின் கால்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
![Mysterious animal... The public fears](http://image.nakkheeran.in/cdn/farfuture/_rZgGR-lyxYL36zT_yPQc7wZ4WcEJgcYyhztmVw2vB0/1576553486/sites/default/files/inline-images/qwqw121.jpg)
இதுகுறித்து சிதம்பரம் வனசரக அலுவலர் சரவணகுமார் கூறுகையில், பசுமாட்டை கடித்திருப்பது சிறுத்தையோ, புலியோ அல்ல,விலங்கின் கால்தடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது அது குள்ளநரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதன் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்துக்குமேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் தொடர்ந்து அகரஆலம்பாடி கிராமத்தை இருந்து கண்காணித்து வருவார்கள். பொதுமக்கள் சிறுத்தைபுலி என நினைத்து அச்சப்படவேண்டாம். குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் யாரும் தனியாக வயல்வெளிக்கு செல்லவேண்டாம். பசுமாட்டை கடித்த விலங்கை இரண்டுநாட்களில் பிடித்துவிடுவோம் என்றார்.
இதுகுறித்து ஆய்வு செய்த புவனகிரி வட்டாட்சியர் சத்தியன் கூறும்போது, உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்க அரசு சார்பில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மர்ம விலங்கு கடித்து பசு மாடு உயிரிழந்தால் அக்கிராம பொதுமக்கள் சிறுத்தை ஊருக்குள் புகுந்துள்ளது என்று அச்சம் அடைந்துள்ளனர்.