
பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (05/06/2025) காலை தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொண்டனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகிய இருவரும் ஒரே காரில் வந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் சந்திப்பு மேற்கொண்டனர். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க குருமூர்த்தி மூலம் பேசப்பட்டதாக யூகங்கள் கிளம்பின. அதேநேரம் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி ராமதாஸும், அன்புமணியும் இணைந்து விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னை புறப்பட்ட நிலையில் காரில் அமர்ந்தபடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் ''மருத்துவப் பரிசோதனைக்காக செல்லவில்லை. உடல்நிலை நன்றாகதான் இருக்கிறது. ஆடிட்டர் குருமூர்த்தியடனும் சைதை துரைசாமியுடனும் நீண்ட நாள் நட்பு உள்ளது. இருவரும் மதிக்கத்தக்கவர்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்களின் 'குருமூர்த்தி கூட்டணி குறித்து ஏதேனும் பேசினாரா?' என்ற கேள்விக்கு சூசகமாக பதிலளித்த ராமதாஸ், ''குருமூர்த்தி பேசினார்... பேசினோம்'' என்று மட்டும் பதிலளித்தார். 'அன்புமணியுடன் பேசினேன் ஆனால் அது குறித்து பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்' என்று பதிலளித்துவிட்டு சென்றார்.