
பொறியியல் படிக்க பணம் இல்லாத விரக்தியில் பெற்றோருடன் மாணவி விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (55). ஓட்டுநராக பணிபுறிந்து வருகிறார். இவரது மனைவி கலைவாணி(48). மகள் காயத்ரி (18). காயத்ரி இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ளார். இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டார். ஆனால் வறுமையால் பிரபாகரனால் மகளை படிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மதியம் 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கி விழுந்தனர். இரவாகியும் வீட்டில் விளக்கு எரியாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டி பார்த்தனர். கதவை திறக்காததால் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது 3 பேரும் மயங்கி கிடந்தனர்.
இதையடுத்து, மயங்கி கிடந்தவர்களை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். கலைவாணிக்கும், காயத்ரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.