Skip to main content

தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்... நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைவரிடம் (சட்டம் ஒழுங்கு) கனிமொழி எம்.பி. மனு

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

kanimozhi dmk mp

 

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக காவல்துறை தலைவரிடம் (சட்டம் ஒழுங்கு), கனிமொழி எம்.பி. மனு அளித்துள்ளார். 

 

மனு விவரம் வருமாறு:

 

“ஜே.கே. திரிபாதி ஐ.பி.எஸ்
தமிழக காவல்துறை தலைவர் (சட்டம் ஒழுங்கு)
தலைமை அலுவலகம்.
சென்னை-600004

 

வணக்கம்,

 

பார்வை: திருமதி ஜெ. செல்வராணி, அரசரடி விநாயகர் கோயில் தெரு, சாத்தான் குளம் மனு தேதி 23.6.2020.

 

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னீஸ் ஆகியோரை சாத்தான் குளம் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித் தனமான அடித்து உதைத்து - அதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காவல்நிலையத்தில் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் இருவருக்கும் மருத்துவ உதவிகள் கொடுக்காமல்- அவர்கள் தாக்கப்பட்டதையும் மாஜிஸ்திரேட்டிடம் மறைத்து நீதிமன்ற காவல் பெற்று கோவில்ப்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளது மனித நேயமற்றது. மிக மோசமான மனித உரிமை மீறல். சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் செத்து விட்டதா என்ற அடிப்படைக் கேள்வியை இந்த மரணங்கள் எழுப்புகின்றன.

ஊரடங்கு நேரத்தில் கடை நடத்தினார் என்பதற்காக உயிரையே பறிக்கும் வன்முறை தாக்குதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வளவு கொடூரமான கொலை குற்றத்தில் ஈடுபட்ட அந்த காவல்துறை அதிகாரிகளை ஆயுதப்படைக்கு மாற்றி விட்டால் மட்டும் நீதி வழங்கியதாக அர்த்தம் ஆகாது. பறிபோன உயிர்களை யார் திருப்பிக் கொடுப்பது? ஆகவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்க்க வேண்டிய முழுப்பொறுப்பு காவல்துறை தலைவர் என்ற முறையில் தங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

பார்வையில் கண்டுள்ள ஜெயராணியின் மனுவினை தங்களது நடவடிக்கைக்காக அனுப்புகிறேன். அவரது கணவர் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னீஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், போலீஸார், சம்பந்தப்பட்டோர் அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவரையும் உடனடியாக பணியிடை நிக்கம் செய்ய வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தரக்கூடிய தேர்தல் இது” - கனிமொழி எம்.பி.!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. துணைப் பொதுச செயலாளருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் இருக்கிறேன் என கருணையோடு ஓடி வந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த பகுதியில் இருந்தாலும் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு வீடு இடிந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயை தி.மு.க. அரசு.

"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கிற பிரதமர் நிவாரண நிதியையும் கொடுப்பதில்லை. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுப்பதில்லை. நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால் 26 காசுகளை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 காசுகள் என இருமடங்காக கொடுக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிற, ஓர வஞ்சனை செய்துகொண்டிருக்க கூடிய பா.ஜ.க.வோடு இத்தனை ஆண்டுகளாக எடுத்த மக்கள் விரோத, சிறுபான்மையினருக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க.. ஆனால் இன்று பிரிந்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தர கூடிய தேர்தல் இது” எனப் பேசினார்.