Skip to main content

"துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்தார்கள்" - கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு...!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

கரூர் மாவட்ட சுங்க சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ex mla Balabharathi accusation

 



ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஎம்) பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று மாலை அவரது காரில் ஈரோடு வந்தார். அப்போது, கரூர் மாவட்ட டோல்கேட்டில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலபாரதி ஈரோட்டில் இன்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருச்சியில் இருந்து கரூர் செல்லக்கூடிய மணவாசி சுங்கசாவடி உள்ளது. அங்கு எனது கார் வந்தவுடன், எனது அனுமதி சீட்டினை காட்டியபோது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.அதோடு எங்களது டிரைவரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து எனது டிரைவர் காரை எடுக்கமுடியாது என கூறினார். அப்போது, சுங்கச்சாவடி அலுவலகத்தில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் வந்த ஒருவர்  எனது கார் முன் நின்றார். அது ஏதோ மிரட்டல் தொணியில் இருந்தது. அந்த துப்பாக்கியுடன் வந்தவர் கன்மேன் என கூறினர். அவர் பணத்தை எடுத்து செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், சுங்க வரி செய்யும் இடத்திற்கு வருகிறார். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளனரா? என்பதும் தெரியவில்லை. 

சுங்கசாவடிகளில் சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உட்கார வைத்துள்ளனர். யாராவது கேள்வி கேட்டால் பணத்தை கொள்ளையடிக்க வந்ததாக சுட்டு கொன்றுவிடுவார்கள் என நினைக்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த சுங்கசாவடிகள் உள்ளனவா?, இச்சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஎம் கட்சி சார்பில் புகார் அளிப்போம். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைய பல்வேறு சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வடமாநிலங்களில் பெரும்பாலான சுங்கசாவடிகள் இல்லை. கேரளாவிலும் இல்லை. எனவே, தமிழக அரசும் சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்." என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Fee increase in toll booths
கோப்புப்படம்

தமிழகத்தில் உள்ள 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.