
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள். நேற்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர், திட்டக்குடி பெருமுளை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி சோதனைச் செய்தனர்.
அவரிடம் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்சத்து எழுபத்தி ஐந்து ஆயிரம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. அப்படி பணம் கொண்டு வந்தவர் ஈ. கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் செல்வக்குமார்(35) என தெரியவந்து. அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அந்தப் பணத்தை திட்டக்குடி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தார்.
கடந்த நான்கு நாட்களில் திட்டக்குடி பகுதியில் மட்டும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.