
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதியம் 2 மணியளவில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். அப்போது அவர் வாதிடுகையில் காவல்துறை அதிகாரிகளுக்கும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் உத்தரவு தெளிவுபடுத்தியுள்ளது. அமலாக்கத்துறையினரைப் போலீஸ் அதிகாரிகளாகக் கருதினால் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கும் இருக்கும். எனவே போலீசாருக்கு உள்ள அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருந்தால் அது பி.எம்.எல்.ஏ. சட்ட விதிகளுக்குப் புறம்பானது” என வாதிட்டார்.
இந்நிலையில் வழக்கை மீண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 1 ஆம் தேதி மதியம் ஒரு மணிக்குள் வாதங்களை நிறைவு செய்யச் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளது.