Skip to main content

மாப்பிள்ளை தாடி வைத்திருக்கிறார்... கொள்கைக்காக என்றால் சந்தோசப்படுவேன்... மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

 

சென்னை பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் இரா.அ.சிதம்பரம் சகோதரர் கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.
 

அப்போது, இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறும் திருமண விழாக்களில் தவறாமல் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதை வழக்கமாகவும், வாடிக்கையாகவும் வைத்திருக்கிறேன்.
 

நினைவில் வாழும் பெரம்பூர் வாத்தியார் சிதம்பரம் அவர்களைப் பற்றி எல்லோரும் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். அவர் மட்டுமல்ல, அவருடைய வாரிசுகளும் குடும்பத்தினரும் கூட இன்றைக்கும் இந்த இயக்கத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பப் பாசம்! இப்படிப்பட்டவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழக வாரிசுகள்!! இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

 

dmk


 

நம்முடைய சிதம்பரம், எந்தளவிற்கு போராட்ட உணர்வோடு இருந்தார் என்பதைப் பற்றி நம்முடைய டி.கே.எஸ் அவர் சொன்னார்; இரங்கநாதன் அவர்கள் சொன்னார்; சேகர் பாபு அவர்கள் சொன்னார்; இங்கு பேசிய அனைவரும் சொன்னார்கள். அதில், அவர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை அவர் தாடி வைத்திருந்தார் என்றார்கள். காரணம், ஒரு கொள்கை - நினைத்ததை முடிக்க வேண்டும். கழகத்திற்கு சோதனை வந்தபோது, தனக்கு ஒரு வேதனை ஏற்பட்ட நேரத்தில் ஒரு வைராக்கியமாக அவர் தாடி வைத்திருந்தார். ஆனால், அது கொள்கைக்காக!
 

இப்போது மாப்பிள்ளை தாடி வைத்திருக்கிறார் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது கொள்கைக்காக என்றால் நானும் சந்தோசப்படுவேன். ஆனால், இப்போது எல்லோரும் எதற்காக தாடி வைக்கின்றார்கள் என்றால் அழகிற்காக! கொஞ்சம் முகம் ஒட்டியிருந்தால் முகம் சற்று பெரிதாக தெரிவதற்காக வைத்திருக்கிறார்கள். அது ஒரு பேஷனாக வைக்கும் சூழ்நிலைகூட வந்துவிட்டது.
 

வாத்தியார் சிதம்பரம் அவர்கள் ஒரு கொள்கைக்காக வைத்திருந்தார் என்பதைப் பற்றி எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள். எனவே, அப்படிப்பட்ட ஒரு கொள்கைக் குடும்பத்தில், ஒரு இலட்சியவாதியாக இருந்த அவரது குடும்பத்தில் நடைபெறும் மணவிழா என்பது உள்ளபடியே பாராட்டுக்குறிய வகையில் அமைந்திருக்கிறது.
 

அதேபோல், நம்முடைய பாரதி அவர்கள் பேசுகின்ற போது பெயர் மாற்றங்கள் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். அவருக்கு இருந்த பெயர், தலைவர் கலைஞர் அவர்களுக்கு இருந்த பெயர். அதேபோல் சிதம்பரம் அவர்களுக்கு இருந்த பெயர், இந்த மணவிழாவை நடத்திக்கொண்டிருக்கும் கலைவாணன் அவர்களுக்கு இருந்த பெயர். இவையெல்லாம் எப்படி மாற்றப்பட்டது என்பது பற்றிய வரலாறு எல்லாம் எடுத்துச் சொன்னார். என் பெயரையும் எடுத்துச் சொன்னார். அதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 

எனவே, மணமக்களை அன்போடு நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மணமகனின் பெயர் முத்துவேல் என்கின்ற தமிழ்ப் பெயர் தான். ஆனால், மணமளின் பெயர் ‘ஆசிகா இது’ தமிழ் பெயரா என்பது கேள்விக்குறிதான்!?
 

நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


 

எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும்.
 

இவ்வளவு சொல்கிறாயே நீ, ஸ்டாலின் என்ற பெயர் என்ன தமிழ்ப் பெயரா? ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லையே என்று சிலர் கேட்கலாம்.
 

என் பெயர்க்காரணம் குறித்துதான் பாரதி அவர்கள் விளக்கிச் சொன்னார். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய -  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் அவர்கள் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் அந்தப் பெயரை எனக்கு வைத்தார்கள்.
 

காரணம், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கையின்மீது அளவுகடந்த பற்று உண்டு - பாசம் உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பப் பெயர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். முரசொலி மாறன், செல்வம், அமிர்தம் இதெல்லாம் தலைவர் கலைஞர் குடும்ப உறவினர் பெயர்கள்.
 

அவருடைய பிள்ளைகள், என்னுடைய மூத்த அண்ணனுக்கு, என்னுடைய தாத்தாவின் நினைவாக முத்துவேல் என்ற அவருடைய பெயரை சூட்டினார்கள்.
 

அதேபோல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்ட அழகிரிசாமி அவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார். மேடையில் இவ்வளவு வீராவேசாமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கலைஞர் அவர்களே நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.
 

அதேபோல், என்னுடைய தம்பிக்கு தமிழரசு, தங்கைகளுக்கு தமிழ்செல்வி, கனிமொழி என்று, வீட்டில் இருக்கும் அத்தனைப் பேரப்பிள்ளைகளுக்கும் தமிழ் பெயர்கள்தான்.
 

ஆனால், என்னுடைய பெயர் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இந்த பெயர் வைத்த காரணத்தால் நான் பல இடர்களை அனுபவித்திருக்கிறேன். நான் சட்டமன்ற உறுப்பினராக 1989-ல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, இரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை முழித்து – முழித்து பார்ப்பார்கள்.


 

ஏர்போட்டில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு!
 

இன்னும் கூட சொல்லவேண்டுமென்றால், அண்ணா சாலையில் இருக்கும் சர்ச் பார்க் கான்வெண்ட் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போது பெண்கள் மட்டும்தான் படிக்க முடியும். ஆண்கள் படிக்கமுடியாது. ஆனால், முன்பு ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் பள்ளியாக இருந்தது. அதுதான், தமிழ்நாட்டில் நம்பர் 1 கான்வென்ட் என்று சொல்வார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் எப்படியாவது என்னையும், என் தங்கை தமிழ்செல்வியையும் சேர்க்க வேண்டும் என்று நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் சென்றிருந்தார்கள். முரசொலி மாறன் அவர்கள் தான் எங்கள் எல்லோரையும் படிக்க வைப்பதற்கு ஒரு காப்பளராக [கார்டியனாக] இருந்தார்.
 

அப்போது அண்ணா சாலையில் முரசொலி அலுவலகம் எதிரில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. எனவே, அங்கே சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து 'அட்மிசன்' எல்லாம் வாங்கி சேர்த்துவிட்டார்கள். அப்படி, சேர்ந்தப் பிறகு முதன்முதலில் நான் பள்ளிக்கூடத்திற்குபோகும் போது, அந்தப் பள்ளியின் தாளாளர் [கரெஸ்பாண்டன்ட்] முரசொலி மாறன் அவர்களிடத்தில், "இவர்கள் இரண்டு பேரையும் இப்போதே சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை மட்டும் கொஞ்சம் மாற்றி விடுங்கள். ஏனென்றால், இரஷ்யாவில் அந்தப் பெயரால் மிகவும் பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அங்கு அவரது சிலைகளையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கிறிஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்கிறது. எங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடும். எனவே, இந்த பெயரை மட்டும் மாற்றிவிடுங்கள்", என்று சொல்லியிருக்கிறார்.

 

dmk


 

உடனே தலைவர் கலைஞரிடத்தில் முரசொலி மாறன் அவர்கள் இதை சொன்னபோது, “நான் ஸ்கூலை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் பையன் பெயரை மாற்ற மாட்டேன்” என்றார். இது வரலாறு!
 

எனவே, இப்படி பெயரை வைப்பதில்கூட திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது.
 

இந்த திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர்கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் - சூட்டுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
 

அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்று அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியவில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.