
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் தரைதளம் மற்றும் 7 தளங்களுடன் கூடிய வேலூர் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீரென ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “வேலூர் அரசு பல் நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையங்கள் 11 உடன் இங்கே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் புகழ் பெற்ற மருத்துவமனை இந்த வேலூர் அரசு மருத்துவமனை. இது விரைவில் தமிழக முதல்வரை கொண்டு திறப்பு விழா செய்ய முதல்வரிடம் தேதி கேட்டுள்ளோம். மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி எதையுமே தர மறுக்கிறார்கள். ‘என்ன அவர்கள் அப்பன் வீட்டுக் காசா தருகிறார்கள்..’. அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழகத்திலிருந்து ஜி.எஸ்டி மூலம் செல்லும் பணத்தைத் தானே கேட்கிறோம். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இரண்டு புயல்கள் தமிழகத்தைத் தாக்கியது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வந்தார்.. பார்வையிட்டார். ஆனால், நமக்கு இது வரை நிதியை வழங்கவே இல்லை. தர வேண்டிய நிதியை அவர்கள் ஒழுங்காக தருவதில்லை. தற்போது புதிய அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புதிய மருத்துவர்கள் நியமிப்பது குறித்து நாளை சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு செய்யவுள்ளார். அவர் முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் அமைக்கும் திட்டம் இல்லை. காரணம், கட்டிடங்களை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. சி.எம்.சி மருத்துவமனையின் அருகே சுரங்கப்பாதை அமைக்க அவர்களிடம் இடம் கேட்டுள்ளோம். அவர்களுடன் பேசி வருகிறோம். மருத்துவமனைக்கு நிதி தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு கண், கல்வித்துறை ஒரு கண் என சொல்லியுள்ளார். இந்த இரண்டு துறைக்கும் தாராளமாக செலவு செய்வார்.
ஏற்கனவே கடந்த ஆட்சியில் 70 ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை, அணுகு சாலையும் அமைக்கத் திட்டமிடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரயில்வே பாலம் 35 பாலங்கள் முடித்துவிட்டோம். மேலும் 32 ரயில்வே பாலம் முடியும் தறுவாயில் உள்ளது. நாங்கள் வந்த பின்னர் 10 ரயில்வே பாலங்கள் அறிவித்தோம். அந்த பாலங்கள் எல்லாம் நிறைவடைந்த நிலையில் உள்ளது. புதிய பால திட்டங்களுக்கு 85 சதவிகிதம் நிலம் கையகப்படுத்திய பின்னர் தான் டெண்டர் விடவேண்டும் என்று சொன்னார். வேலூரில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் 13.40 கிலோமீட்டர் ரூ.300 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் நடக்க இருக்கிறது. அதில் 3 பாலங்களும் அமையும் நில எடுப்பு முடிக்கப்பட்டு இந்த ஆண்டே பணிகளை கட்டாயம் துவங்கிவிடுவோம் பிரம்மபுரம் - சத்துவாச்சாரி வரையில் ரூ.100 கோடிக்கு பாலாற்றின் மேம்பால பணிகள் நடந்து வருகிறது எனக் கூறினார்.