Skip to main content

காதுகேளாத 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! - அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018


சென்னையில் காது கேளாத 12 வயது சிறுமியை மிரட்டி, 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியில் நம்மை உறைய வைக்கிறது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் கடந்த 30 வருடங்களாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகள் வெளிமாநிலத்தில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது மகள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 12 வயது.

இந்நிலையில் அந்த சிறுமியின் தாய், காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தான் வசித்து வரும் குடியிருப்பில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தனது 12வயது மகளை மிரட்டி 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இவர்கள் இருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவனங்கள் மூலம், ஒப்பந்த அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 

 

 

அதில் 66 வயதான ரவிக்குமார் என்ற லிஃப்ட் ஆப்ரேட்டர், அங்குள்ளவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். அந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள், தரைத்தளம், உடற்பயிற்சி மையம், மொட்டை மாடி போன்ற ஆளில்லா இடங்களுக்கு அழைத்துச் சென்று, மயக்க ஊசி செலுத்தியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், செல்போனில் சிறுமியை ஆபசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். நடந்த கொடுமைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்த சிறுமி, வெளிமாநிலத்தில் தங்கி படிக்கும் தனது சகோதரி விடுமுறைக்கு வந்தபோது அவரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்தே அவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரியவர அவர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த காவலர்கள், அவரை மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

 

 

பாலியல் வன்கொடுமை தொடர்பாக, சிறுமியிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. சிறுமி அடையாளம் காட்டியதன் அடிப்படையில், அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் லிஃப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார், ப்ளம்பர் சுரேஷ், காவலாளிகள் சுகுமாறன், அபிஷேக், இறால் பிரகாஷ், ஒரு உதவியாளர் உள்பட 6 பேர் மீது போக்ஸோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்த காவலர்கள், அவர்களை கைது செய்துள்ளனர்.

அதில் தொடர்புடையதாக 18 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலி சிரெஞ்சுகள், காலி குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட தடயங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்