Skip to main content

திமுக மூத்த தலைவர்களை மொய்க்கும் எம்.எல்.ஏக்கள்

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Who all will be get chance DMK Ministry


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே தேர்தல் களம் அனல் பறக்கத் துவங்கியது. அதேபோல், இரு கட்சியினரும் தங்களது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுமா என பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். குறிப்பாக, திமுகவில் இந்த ஆவல் அதிகமாகவே இருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வேட்பாளர்கள் பட்டியலை வாசிக்கும் அந்த நிமிடம்வரை பல கருத்துகள் திமுக தொண்டர்களிடையே பரவியது. 

 

திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த ஐபேக் டீம் ஒரு பட்டியலை தயார் செய்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது. அதன்படிதான் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனும் பேச்சுக்களும் வலம் வந்துகொண்டிருந்தன. அதேபோல், திமுகவினர் பலர் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடம், தங்களது பெயரை சிபாரிசு செய்யும்படியும் கேட்டு வந்தனர். “வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் மிக ரகசியமாக வைத்துள்ளார். அது வெளியாகும்போதுதான் அனைவருக்கும் யார் யாரின் பெயர்கள் இருக்கின்றன என்பதே தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்” என தங்களை கேட்டு வந்த கட்சியினரிடம் திமுக மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர். 

 

திமுகவின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அவரே ஒவ்வொரு வேட்பாளர்கள் பெயரையும் படித்தார். அதில் பெரும்பாலும் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் பெயர்கள் அடங்கியிருந்தன. ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தவுடன், சமூகவலைதளங்களில் திமுக அமைச்சரவை பட்டியல் என்றொரு செய்தி வலம் வர ஆரம்பித்தது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த சிலர், தேர்தலில் வெற்றி பெறவில்லை. இது இப்படி இருக்க, தேர்தல் முடிவுகள் வெளியானதும் மற்றொரு பட்டியல் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதனை பலர் பகிர்ந்தும் வருகின்றனர். 

 

திமுக இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பானமையுடன் ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இதனை மேலும் வளர்க்கும் விதமாகவும், கட்சியை மேலும் பலப்படுத்தும் விதமாகவும் அமைச்சரவை பட்டியலை தயார் செய்து தன்னிடம் ரகசியமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 

 

வேட்பாளர் பட்டியலை போலவே அமைச்சரவை பட்டியலையும் மு.க. ஸ்டாலினே வெளியிடுவார் என்றும் யார் யார் அமைச்சராகிறார்கள் என்பது அப்போதுதான் திமுகவினருக்கே தெரியவரும் என்றும் தங்கள் பெயர் இடம்பெற்றவர்கள் சந்தோஷ பெருமூச்சு விடுவர் என்றும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.