
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நேற்று (22.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபம் ஏற்ற வேண்டும், திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளைக் காக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாநாட்டில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதே போன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி மற்றும் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பேசியிருந்தனர். அது தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “முருகன் மாநாட்டில் அதிமுக அமைச்சர்கள் கலந்துகொண்டது வெட்கக்கேடானது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக ஆகிவிட்டார்கள். திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லித்தான் இந்த முருகன் மாநாட்டையே அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அதிமுக கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி தூக்கத்தில் இருப்பதால் அதனை அவர் மறந்துவிட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பாஜகவின் கொத்தடிமைகள் என்று மாநாட்டில் கலந்துகொண்டு நிரூபித்து இருக்கிறார்கள்” என்றார்.