Skip to main content

சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த லாரி; நொடியில் தப்பிய கார்!

Published on 23/06/2025 | Edited on 23/06/2025

 

Lorry catches fire after hitting roadblock

தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றுக் கொண்டு ஆரணி வழியாக  நேற்று முன்தினம்(21.06.2025) இரவு வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி திடீரென விபத்துக்குள்ளாகியது. வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் செல்லும்போது திடீரென லாரியின் டயர் வெடித்ததாகவும், இதனால் லாரி கணியம்பாடி அரசு பள்ளி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இதில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றி வெடித்துள்ளது.

சாலையில் கொட்டிய டீசலும் பற்றி எரிந்துள்ளது. அது அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கி செல்வதை கண்ட கார் உரிமையாளர் விரைவாக செயல்பட்டதால் கார் மற்றும் இருசக்கர வாகனம் தப்பியது. மேலும் லாரி ஓட்டுநர் தப்பி செல்லும் காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தீ மள மளவென லாரி முழுவதும் பரவியதில் லாரி தீ பற்றி எரிந்துள்ளது. இதனை அறிந்த ஓட்டுநர் லாரியில் இருந்து தாவிக் குதித்து தப்பி ஓடி உள்ளார்.

Lorry catches fire after hitting roadblock

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வாணியம்பாடி காவல் துறையினர் சாலையின் நடுவே எரிந்து நாசமான லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் ஆரணி வேலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மேலும் இவ்விபத்து குறித்து வேலூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் போதிய மின்விளக்கும், எச்சரிக்கை விளக்கு மற்றும் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் இல்லாததால் இது போன்று விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

சார்ந்த செய்திகள்