
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு போவதாக நாளுக்கு நாள் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு வந்தது. இதனை அடுத்து தியாகதுருகம் அருகே உள்ள விருகாவூர் சாலையில் உதவி ஆய்வாளர் ஜெயமணி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது விருகவூர் கிராமத்தில் இருந்து தியாக துருகத்தை நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று அவ்வழியாக வந்தது. அந்த வாகனத்தையும் வழிமறித்து போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னாக பதில் அளித்த நிலையில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்கின்ற ஆனிசங்கர் என்பதும், கொங்கராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பதும், இவர்களுடன் 17 வயது சிறுவன் வந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்தப் பகுதியில் திருடிய 16 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து சிறார் உட்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வரும் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.