எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த 25ஆம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யபட்டது.மசோதாவை தாக்கல் செய்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் , முத்தலாக் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் 574 பெண்கள் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யபட்டுள்ளனர். சாப்பிடும் போது சப்பாத்தி இல்லாமல் தீர்ந்துவிட்டால், மனைவி காய்கறி வாங்கப் பணம் கேட்டால் முத்தலாக்.
இப்படி காரணமின்றி விவாகரத்து நடைபெறுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேதனை தெரிவித்தார். இந்த முத்தலாக் மசோதாவிற்கு மக்களவையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவில் ஒரு மசோதாவிற்கு இரண்டு விதமான நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, வேலூர் தேர்தலை மையமாக வைத்தே அதிமுக மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்கின்றனர். மேலும் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பும் செய்துள்ளனர்.