Skip to main content

சாத்தூர் தொகுதியில் இரண்டாமிடம் யாருக்கு?- மும்முனைப் போட்டியில் தகிக்கும் வேட்பாளர்கள்!    

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

SATTUR ASSEMBLY CONSTITUENCY CANDIDATES STRENGTH

 

நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021- 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை  வெளியிட்டுள்ளோம்.

 

சாத்தூர் தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியையும், வேட்பாளர்களை வரிசைப்படுத்தியும், நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளி வந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, சாத்தூர் தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ- “அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே லட்சியம்..” என்று சவால்விட்டு, அ.ம.மு.க. பக்கம் தாவி சாத்தூர் தொகுதியில் போட்டியிடுபவர் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜவர்மன்.

 

‘அப்படியென்றால் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நினைப்பே இல்லையா?’ என்று கேட்டால், “அ.தி.மு.க.வை தோற்கடிப்பேன்; ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனையும் தோற்கடிப்பேன். மீண்டும் எம்.எல்.ஏ. ஆவேன். மக்கள் ஆதரவு எனக்கே இருக்கிறது.” என்று சிலிர்க்கிறார் ராஜவர்மன்.  

 

சாத்தூர் தொகுதியின் கள நிலவரம் எப்படி? 

ஜாதி மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையிலான  ‘அரித்மெடிக்’ ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனுக்கு சாதகமாக உள்ளது. தொகுதியில் இரண்டாம் இடத்தில் உள்ள நாயுடு சமுதாய வாக்குகளை ரகுராமனால் அறுவடை செய்ய முடியும். முதலிடத்தில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை, ராஜவர்மன் கணிசமாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் கட்சி ரீதியாகவும் பிரித்துக்கொள்கின்றனர். தேர்தல் களத்தில் ‘எங்க ஏரியா.. உள்ளே வராதே!’ என்று முக்குலத்தோர் ஏரியாக்கள் பலவற்றில் ரவிச்சந்திரனுக்கும், சிலவற்றில் ராஜவர்மனுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. சாத்தூர் டவுண் நாடார் வாக்குகளும்கூட, ஓரளவுக்கு ராஜவர்மன் பக்கமே சாய்கின்றன.  தே.மு.தி.க. வாக்குகள் இவருக்கு ப்ளஸ்.

 

தொகுதியில் அதிகமாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள், யாருக்கு ஆதரவு என்ற தள்ளாட்டத்தில் இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கென்று, இத்தொகுதியில் எந்த வாக்கு வங்கியும் இல்லை. அதேநேரத்தில், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள், ம.தி.மு.க. வேட்பாளருக்கு பலம் சேர்க்கின்றன. இத்தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ரெட்டியார், செட்டியார், சாலியர், பிள்ளை, யாதவர், மூப்பர் வாக்குகளில் பெரும்பாலனவை ரகுராமனுக்கும், ஓரளவுக்கு ராஜவர்மனுக்கும் போகின்றன.

 

நாம் தமிழர் வேட்பாளராக கி.பாண்டியும், ஐ.ஜே.கே. சார்பில் எம்.பாரதியும் களமிறங்கினாலும், மும்முனைப் போட்டியே நிலவுகிறது இத்தொகுதியில். வேட்பாளர்களைப் பொறுத்த மட்டிலும், கில்லியாகச் சுற்றிவருவது ராஜவர்மன் மட்டும்தான். பெருவாரியான ஆதரவுப் பட்டாளம் அவர் பின்னாலேயே செல்கிறது. வாக்கு சேகரிப்பதற்கு நடந்தே போகிறார். வாக்காளர்கள் யாரைப் பார்த்தாலும் காலில் விழுகிறார். ஏனென்றால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்.எல்.ஏ. பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை  உணர்ந்துதான், வெறித்தனமாக தேர்தல் வேலை பார்க்கிறார். 

 

பணபலம் இல்லாத ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனோ, அ.தி.மு.க. ரவிச்சந்திரனோ, தேர்தல் பணியில் அப்படி ஒன்றும் தீவிரம் காட்டவில்லை. ம.தி.மு.க. தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுக்குமா? கொடுக்காதா? என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக, இத்தொகுதியில் விவாதிக்கின்றனர். அ.தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், முறையாகப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் வேட்பாளர் தரப்புக்கே இருக்கிறது. மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும், ஓட்டுக்கு அதிகமாக பணம் தந்தே ஆகவேண்டும் என்ற ராஜவர்மனின் முயற்சிக்கு, கடைசி நேரத்தில், அதிகார பலத்தால் முட்டுக்கட்டை போடும் திட்டம் ஆளும் கட்சியினருக்கு இருக்கிறது. 

 

யார் வெற்றி பெறுவார் என்பதைக் காட்டிலும், இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இத்தொகுதியின் பிரதான கேள்வியாக இருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்