Skip to main content

கருவுற்றப் பெண்ணை சாகடிப்பதா? ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்! அன்புமணி

Published on 08/03/2018 | Edited on 08/03/2018


 

திருச்சியில் காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

அதில் அவர் கூறியிருப்பதாவது, 
 

உலகமே மகளிர் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், திருச்சி தூவாக்குடி சாலையில் நேற்றிரவு கருவுற்ற பெண்மணிக்கு காவல்துறையால் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கருவுற்ற தமது மனைவி உஷாவுடன் இரு சக்கர ஊர்தியில் வந்த போது, அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அவரது வாகனத்தைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் இருவரும் நெடுஞ்சாலையில்  விழுந்துள்ளனர். சாலையில் விழுந்த உஷா மீது மூடுந்து மோதியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். கணவர் ராஜா படுகாயங்களுடன் திருச்சியிலுள்ள மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
 

இந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரிகத்துக்கு சற்றும் ஒவ்வாதது ஆகும். தூவாக்குடி பகுதியில் தலைக்கவச சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜும், அவரது குழுவினரும் கை காட்டிய போது ராஜா மிதமான வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளார். இது காவல்துறை மீதான அச்சத்தால் பலராலும் செய்யப்படும் ஒன்று தான். ராஜா பயங்கரவாதியோ, கடத்தல் காரனோ இல்லை என்பதால் அவரை விட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவரை மறித்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொறுப்பற்ற முறையில், மிருகத்தனமாக செயல்பட்ட ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று ராஜாவின் இரு சக்கர ஊர்தியை எட்டி உதைத்ததாலேயே அந்த வாகனம் நிலைதடுமாறி விழுந்துள்ளது. சாலையில் விழுந்த உஷா சுதாரிப்பதற்குள் அவர்களுக்கு பின்னால் வந்த மூடுந்து மோதி இறந்தார்.
 

ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அவரது வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை  காவலர்களுக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது? அப்பாவி இணையரை எட்டி உதைத்து உயிரழக்கும் நிலைக்கு தள்ளுவது தான் காவல்பணியா? காவல்துறையினரின் இத்தகைய அணுகுமுறைக்கு இது தான் முதல் உயிரிழப்பு என்று கூறிவிடமுடியாது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இது போன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தலைக்கவசம் அணியாதவர்களை விரட்டிச் சென்றதால் சாலைத் தடுப்பு மீது இருசக்கர ஊர்தி மோதியும், தவறி விழுந்தும் பல விபத்துகள் இதுபோன்று ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது; சாலை நடுவில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் ஆய்வாளர் காமராஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் கருவுற்ற பெண் உயிரிழந்துள்ளார்.
 

இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால், நள்ளிரவில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். காவல்துறை தடியடியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயலும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே மிருகத்தனமாக செயல்பட்டு அப்பாவி பெண்ணின் இறப்புக்கு காரணமாகி விட்டதால் தான் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சிக்கலை  பொறுப்புடன் கையாள்வதற்கு பதிலாக தடியடி நடத்தி மக்களைக் காயப்படுத்தியது ஏற்க முடியாததாகும்.
 

காவல்துறையில் மனிதநேயம் கொண்டவர்கள் பெருமளவில் இருக்கும் போதிலும், ஆய்வாளர் காமராஜ்  போன்ற மனநிலை கொண்டவர்களால் தான் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காமராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உஷாவின்  குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்த ஆணையிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் மகத்துவம் குறித்து காவலர்களுக்கு போதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.