Skip to main content

உள்ளாட்சியில் எப்படி ஜெயித்தோம்...? - டெண்டர் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதிமுக முன்னாள் ஒ.செ!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Krishnakumar
                                                            கிருஷ்ணகுமார்


குமரி மாவட்டம், அ.தி.மு.க. தோவாளை ஒன்றியச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ணகுமார். அந்தப் பதவியை இரண்டு வாரங்களுக்குமுன் ராஜினாமா செய்தார். மேலும் தற்போது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவராக உள்ளார். இவர், கடந்த 31 ஆண்டுகளாக, அ.தி.மு.க.வில் இருந்துவருவதுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் உதவியாளராகவும் இருந்துவந்தார். தளவாய் சுந்தரம் மா.செ, மேல்சபை எம்.பி, தமிழக அமைச்சர் எனக் கோலோச்சிக் கொண்டிருந்தபோதெல்லாம் அவரின் உதவியாளராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்துவந்தவர்தான் கிருஷ்ணகுமார். கடந்த ஒரு மாதமாக தளவாய் சுந்தரத்துக்கும் கிருஷ்ணகுமாருக்கும் நெருங்கிய நட்பு இல்லையென்று அ.தி.மு.க.வினர் கூறிவந்தனர்.

 

இந்தநிலையில், கிருஷ்ணகுமார், தான் பேசி ஒரு ஆடியோவை வெளியிட்டு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பையும், தளவாய் சுந்தரத்துக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார். ஏழரை நிமிடம் ஓடும் அந்த ஆடியோவில், “தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சாந்தினியை எப்படியெல்லாம் முறைகேடு செய்து ஜெயிக்க வைத்தோம் என்பது எனக்கும் அந்த கடவுளுக்கும்தான் தெரியும். இது இரண்டு மாதம் கழித்துத்தான் தளவாய் சுந்தரத்துக்கே தெரியப்படுத்தினேன். சாந்தினி ஊராட்சி ஒன்றியத் தலைவரானதும் பொது நிதியில் டெண்டர் நடந்தது. அப்போது ஒப்பந்தக்காரர்களிடம் பேமன்ட் வசூல் செய்து என் கையில் தராமல் அப்படியே தலைவர் கையில்தான் கொடுத்தார்கள்.

 

அப்படி 5 டெண்டர் நடந்தது. எல்லாப் பணத்தையும் தலைவர்தான் வாங்கினார். இதில் ஒருமுறைதான் கவுன்சிலர்களுக்குப் பிரித்துப் பங்குகொடுத்தார். மாதவலாயம் - தோவாளை ரோடு ரூ.3 கோடி, செண்பகராமன்புதூா் ரூ.1.50 கோடி, பூதப்பாண்டி கோர்ட் ரூ.4 கோடி, செண்பகராமன்புதூர் மார்க்கெட் ரூ.10 கோடி, ஈசாந்திமங்கலம், அனந்த பத்மநாபபுரம் தலா ரூ.60 லட்சம் என டெண்டர் விட்டு அதன்மூலம் கிடைத்த பணத்தை தலைவர் என்ன செய்தார்? இதை ஒன்றிய கவுன்சிலர்கள்தான் கேட்க வேண்டும். இந்தப் பணத்தை நான் வாங்கினேன் எனக் கூறுவார்; நீங்கள் நம்புவீர்கள் அதேபோல் தளவாய் சுந்தரமும் நம்புவார். அப்படி என்னிடம் ஒப்பந்ததாரர்கள் தந்தார்கள் என்று அவர்கள் கூறினால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

 

இந்த தலைவர், கட்சி நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடித்து ஒட்டுவது கிடையாது, விளம்பரம் செய்வது கிடையாது, நிகழ்ச்சிக்கு ஆர்கனைஸ் செய்வது கிடையாது. அவர்களுக்குத் தேவை பணம், பணம் தான். இது எல்லாம் என்னைத் தவறாக நினைக்கும் தளவாய் சுந்தரத்துக்கும் கட்சிக்காரர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் இதை வெளியிட்டுள்ளேன்” எனப் பேசியுள்ளார் கிருஷ்ணகுமார்.

 

இந்த நிலையில், அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவி தேர்தலில், முதலில் தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்து ஆளும் கட்சியின் அதிகாரத்துடன் அதிகாரிகளின் உடந்தையுடன் முறைகேடு செய்து அ.தி.மு.க. சாந்தினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அப்போதே முறைகேடு நடந்ததாகப் புகார்கள் கூறியும் தேர்தல் அதிகாரிகள் அதை மறுத்தனர். இப்போது கிருஷ்ணகுமாரின் ஆடியோ அதை உறுதிப் படுத்தியுள்ளது.

 

இது சம்மந்தமாக கிருஷ்ணகுமாரிடம் நாம் கேட்டபோது, “நான் தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விஷயத்தில் தலையிடுவதாக, என் மீது தலைவர் மற்றும் துணைத்தலைவர் தவறான கருத்துகளைக் கட்சியினரிடத்தில் பரப்பி வருகிறார்கள். இதன் உண்மைத் தன்மைகளை என்னுடைய ஒன்றியத்திற்குட்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரியப்படுத்தவேண்டும். அதுதான் ஆரோக்கியமான விஷயம். நான் எந்தத் தவறுகளிலும், குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடவில்லை. அதை தெளிவுபடுத்துவதற்காகத்தான் ஒன்றிய கழகத்தின் வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டேன்” என்றார்.

 

cnc

 

ஊராட்சி ஒன்றியத் தலைவி சாந்தினியிடம் பேசிய போது, “நானும் துணைத் தலைவரும் கிருஷ்ணகுமார் என்ற தனிநபரால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டோம். எதிர்க் கட்சியினர் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் முறைப்படி நியாயமான முறையில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

 

வெற்றி பெற்ற நாங்கள், உள்ளாட்சித்துறை மற்றும் வேறு எந்தத் துறை சம்மந்தமான டெண்டரிலும் தலையீடு செய்யவில்லை. கிருஷ்ணகுமார், உடல்நிலை சரியில்லாமல் ஒ.செ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது தவறுதலாக எங்கள் மீது குற்றம் சுமத்திவருகிறார். அவர் மீண்டும் இப்படியே நடந்தால் கட்சித் தலைமையிடம் புகார் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.