Skip to main content

உயர் கல்வி நிறுவனங்களில் தீண்டாமை! -நாடாளுமன்றத்தில் கனிமொழி குற்றச்சாட்டு!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 


 

தலித் சமூகத்திற்கு எதிரான தீண்டாமை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இது குறித்த புகார்கள் பரவலாக எதிரொலிக்கின்றன. சமூகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கவனத்துக்கொண்டு வரும் வகையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் திமுக எம்.பி. கனிமொழி. அந்த வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் தீண்டாமை குறித்து 16.07.2019 செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் கனிமொழி! 
 


அவர் பேசும் போது, “அண்மைக் காலமாக உயர் கல்வி நிறுவனங்களில் பரவலாக தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அரசு நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறதா? பட்டியல் இனத்தோர், பழங்குடியினருக்கு எதிரான இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் குறித்தான புகார்களை விசாரிப்பதற்கு தனி குழுவோ, தனிப் பிரிவோ ஏற்படுத்தப்பட்டுள்ளதா?” என்றார்.

 

kanimozhi

 

கனிமொழி எம்.பி.யின் கேள்விகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷங்க் பதிலளிக்கையில்,
 

 “உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை தன்னாட்சி பெற்ற அமைப்புகள். அவை தத்தமது சொந்த கொள்கைக் கோட்பாடுகள், சட்டதிட்டங்களுடன் இயங்கி வருகின்றன. பல்கலைக் கழக விதிகள்  சாதி, மத ரீதியாக தீண்டாமை பின்பற்றுவதை அனுமதிப்பதில்லை. மேலும் மாணவர்களுக்கு எதிரான அனைத்து வகை துன்புறுத்தல்கள், தீண்டாமைக் கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும்,  அதற்கேற்ற நிர்வாக முடிவுகளை எடுக்கவும் உயர் கல்வி நிறுவனத் தலைமைகள் தகுதி வாய்ந்தவை.

 

2017-18  கல்வியாண்டில் இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு  எதிரான தீண்டாமைப் புகார்கள் 66, பழங்குடியின மாணவர்களுக்கு  எதிரான தீண்டாமைப் புகார்கள் 6 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவிக்கிறது.


இந்தப் புகார்கள் மீது அந்தந்த பல்கலைக் கழக நிர்வாகங்கள் தங்களது அமைப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றன. அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் தலைமையிலான உயர் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற தீண்டாமைக்  கொடுமைகள் நிகழ்ந்ததாக தகவல் ஏதுமில்லை.


 

 

 மத்திய அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உதவிபெறும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தீண்டாமைக் கொடுமையை தடுத்து நிறுத்தும்படி தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன.  
 

கடந்த 2019 ஜூன் 26 ஆம் தேதி அனைத்துப் பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி  எஸ்சி, எஸ்டி, ஒபிசி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், மற்ற ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தீண்டாமை தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

எந்தவொரு பிரிவினரின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சரிபார்க்கவும், குறை தீர்க்கும் பொறிமுறையை வலுப்படுத்தவும், பல்கலைக்கழக மானியக் குழு(2012 ) விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்திலும் சம வாய்ப்புக்கான மையங்களை அமைப்பதன் மூலம் பட்டியல் சாதி
மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகள் உறுதிசெய்கின்றன. 
 

பல்கலைக் கழகங்களில் இருக்கும்   பின்தங்கிய குழுக்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதும், கல்வி, நிதி, சமூக மற்றும் பிற விஷயங்களில் வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்குவதும், வளாகத்திற்குள் உள்ள பன்முகத்தன்மையை மேம்படுத்துவதுமே பல்கலைக் கழக மானியக் குழுவின் நோக்கம் ஆகும்.
 

எஸ்சி / எஸ்டி மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எஸ்சி / எஸ்டி  மையங்களை நிறுவவும் யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. 

 

Ramesh Pokhriyal Nishank

                                                        ரமேஷ் பொக்ரியால் நிஷங்க் 

 

இதுமட்டுமல்ல, எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குதல், கல்வி மட்டுமல்ல, தனிப்பட்ட, உளவியல் மற்றும் குடும்ப தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர் ஆலோசகர்களை நியமித்தல், விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளை வழங்குதல், ஆலோசனை மையங்களை அமைத்தல், ஹெல்ப்லைன் வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் பல்கலைக் கழக மானியக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
 

சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் வந்தால்,  அவசர நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

 
அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் கீழ் இயங்கும்  உயர் கல்வி நிறுவனங்களில்  எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளையும், கொடுமைகளையும் தடுப்பதற்கு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எஸ்சி எஸ்டி கமிட்டி அமைக்க எஸ்சி. எஸ்டி சட்டம் 1989இன் கீழ் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.
 

 

அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் பாகுபாடு தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், அதுபற்றிய விவரங்களையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களையும் மாதமாதம் ஆன்லைனில்  பதிவேற்ற செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஒருவேளை உயர் கல்வி நிறுவன நிர்வாகங்களின் மீது இத்தகைய புகார்கள் எழுந்தால், அவை அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் பொதுக் குறைத் தீர்க்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மீதான நடவடிக்கை கோரப்படும். அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின்  செயல்முறைக் கையேட்டின் விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சில கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.