
உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் சாய்ரா. நேற்று முன் தினம் (01-06-25) வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. சாய்ராவின் தாயார் சஃபினா, தனது மகளை இரவு முழுவதும் தேடி வந்துள்ளார். அடுத்த நாள் காலை ஜபார் என்பவருடைய வயலில், சாய்ரா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருப்பதை தாயார் சஃபினா கண்டுள்ளார்.
அப்போது சாய்ரா ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட சஃபினா அலறி துடித்துள்ளார். இவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாய்ராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில், சாய்ராவை ஸ்க்ரூடிரைவரால் 30 முறை குத்தி கொலை செய்யப்பட்டதும், அவரது பிறப்புறுப்பில் காயம் இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், சாய்ராவும் ரஃபி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவ நடந்த தினத்தன்று இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஃபி, தான் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூடிரைவரை எடுத்து சாய்ராவை 30 முறை குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரஃபி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.