
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
அதாவது 9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பகல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது என்ற தீவிரவாத அமைப்பினுடைய முக்கிய பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் தலைவர் மசூத் ஆசாத்தினுடைய வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் ஜெய்ஷி முகமது தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக உள்ள மசூத் ஆசாத்தினுடைய குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதேபோல் இந்தியாவால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லஷ்கர் -இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவர் இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷனில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லஷ்கர் -இ தொய்பா அமைப்பின் மூத்த தளபதிகளில் என அழைக்கப்படும் அப்துல் மாலிக் மற்றும் முடாசிர் ஆகியோர் இந்தியாவின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள முர்டிகேவில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.