
சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள இமாம்வாடா பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது பெண். சட்டக் கல்லூரி பட்டப்படிப்பு படித்து வந்த இவர், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த மாணவி, தனது லிப்ஸ்டிக்கால் ‘நான் செல்கிறேன்’ என்று கண்ணாடியில் எழுதியிருந்ததை போலீசார் கண்டனர். இதையடுத்து, மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற மாணவிக்கு, அசாத் என்ற பல் மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக அசாத்தும், மாணவிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால், அசாத் சமீபத்தில் வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இதனால், மாணவி மனவேதனையில் இருந்துள்ளார்.
சம்பவ நடந்த தினத்தன்று, மாணவியை அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டிற்கு அழைத்துள்ளனர். அங்கு மாணவியை ஒரு அறையில் அடைத்து வைத்து மொபைல் போன் மற்றும் வாகன சாவியை எடுத்துக்கொண்டு கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், வீடு திரும்பிய மாணவி, தனது அறைக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.