Skip to main content

பரூக் அப்துல்லாவுக்கு மேலும் 3 மாதங்கள் சிறை நீடிப்பு!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த கையோடு அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் தலைவர்கள் பலரை மத்திய பாஜக அரசு சிறை வைத்தது. காஷ்மீர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட சேக் அப்துல்லாவின் மகனான பரூக் அப்துல்லா மூன்று முறை மாநிலத்தின் முதல்வராகவும் ஐந்துமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய மகனும் முதல்வர் பொறுப்பு வகித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி 370 ஆவது பிரிவை ரத்து செய்த பாஜக அரசு பரூக் அப்துல்லாவை வீட்டிலேயே சிறை வைத்தது. 
 

jk



அவருடைய வீட்ட சிறைச்சாலை என்றும் அறிவித்தது. பிஎஸ்ஏ என்ற பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவரை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை விசாரணையில்லாமல் சிறை வைக்கலாம். ஆனால், நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 மாதங்கள் சிறையை நீடித்திருப்பதால், அவர் 7 மாதங்கள் வரை சிறையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் மட்டுமே பிஎஸ்ஏ என்ற சட்டம் அமலில் இருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் என்எஸ்ஏ என்ற தேசிய பாதுகாப்பு சட்டம் அமலில் இருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு; மேலும் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Announcement that a jammu kashmir party will compete alone from India Alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. 

அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. 

முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்க முடிவு செய்தது. இதனையடுத்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு அடுத்த பின்னடைவாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, வருகிற மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தொகுதி பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி தனது சொந்த பலத்தில் தேர்தலில் போட்டியிடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் இருவேறு கருத்துக்கள் இல்லை” என்று கூறினார்.

Next Story

“காசாவில் ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும்” - பரூக் அப்துல்லா எச்சரிக்கை

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Farooq Abdullah warns for kashmir conflict

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. அதே வேளையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாரமுல்லாவில் உள்ள மசூதியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா இன்று (26-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நமது நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நமது அண்டை நாட்டினரை மாற்ற முடியாது என்றும், அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருந்தால்தான் இருநாடுகளும் வளர முடியும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். அதேபோல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார். 

இது மாதிரியான கருத்துக்கள் தெரிவிக்கின்ற போதிலும் இரு நாடுகளிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. பாகிஸ்தான், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னார்கள். ஆனால், நாம் தயாராக இல்லாததற்கு என்ன காரணம்? காசா மீது இஸ்ரேல் தற்போது குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட அதே கதிதான் நமக்கும் ஏற்படும். அடுத்த காசாவாக ஜம்மு - காஷ்மீர் மாறிவிடும்” என்று கூறினார்.