Skip to main content

ஆர்.எஸ்.எஸ். நச்சு வண்டுகளே! புதிய தலைமுறையினர் உனது சூழ்ச்சி வலையை அறுத்து எறிந்து வெளியே வருவார்கள், அது உறுதி! கி.வீரமணி

Published on 13/03/2018 | Edited on 13/03/2018


பெரியாரை தமிழ் மொழிக்கு எதிரியாகக் காட்டி, வரலாறு தெரியாத இளைஞர்களை தம்வயப்படுத்த நினைக்கும், நூதன சூழ்ச்சி செய்யும் ஆரியப் பிண்டங்களே, ஆர்.எஸ்.எஸ். நச்சு வண்டுகளே! ஒப்பனை கலைய சில மணிநேரம் போதும்; புதிய தலைமுறை எம் இணைய இளைஞர்கள் உனது சூழ்ச்சி வலையை அறுத்து எறிந்து வெளியே வருவார்கள், அது உறுதி என்று  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும், தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார், தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், தமிழ்மறவர் பொன்னம்பலனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார் ஆகியோரின் தனித்தமிழ் இயக்கத் தொண்டால், திராவிடர் இயக்கத் தளபதியான அறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர், நாவலர் போன்றவர்களின் தமிழ்த்தொண்டால், தனித் தமிழ் உணர்வுகள் தழைத்தோங்கியதால் வளர்ந்துள்ள தமிழ்மொழி, இன உணர்வு - ஆரியம் போல் வழக்கொழிந்த வடமொழியின் படையெடுப்பைத் தடுத்து, தமிழ் உணர்வுகளைப் பரப்பி, தமிழை விழுங்கிட முயலும் சமஸ்கிருத, இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்தும் பண்படுத்தியுள்ள இந்த உணர்வுக்  களத்தில் உருவான தமிழ்மொழிப் பற்றைத் திசை திருப்பி, பெரியாரை தமிழ் மொழி எதிரியாகக் காட்டி, வரலாறு தெரியாத இளைஞர்களை தம்வயப்படுத்த நினைக்கும் - நூதன சூழ்ச்சி செய்யும் ஆரியப் பிண்டங்களே, ஆர்.எஸ்.எஸ். நச்சு வண்டுகளே!


நீங்கள் எவ்வளவு திசை திருப்பினாலும், சிண்டு முடிந்தாலும், தந்தை பெரியாரை தமிழ்ப் பகைவராகக் காட்டினாலும், பொருள் திருடி ஓடிய கள்வனைப் பிடிக்க ஓடிவருவோரிடம் எதிர் திசையைக் காட்டும் நயவஞ்சக, நர்த்தன செயல் என்பதை எம்மின இளைஞர்கள் உண்மையை, உம் உண்மை உருவத்தை, சூழ்ச்சி நாடகத்தினையும் புரிந்து, உம்மீது காறி உமிழ்ந்து மூலையில் தள்ளிவிடுவர்.

 

periyar.jpg


 

சில கேள்விகள்
 

1. திடீர் தமிழ்க் காவலர்களே! உங்களின் நாக்கில் நாளை முதல் நமஸ்காரத்திற்குப் பதில் வணக்கம் இனிமேல் ஒலிக்குமா? எதிர்பார்க்கலாமா? 

 

2. உங்கள் கோவில் வழிபாட்டில், ஆகமப்படி அனைவரும் அர்ச்சகர் - தமிழிலேயே வழிபாட்டு அர்ச்சனை என்பதை செய்ய முன்வருவீர்களா? சமஸ்கிருத மந்திரங்கள் புரியாதவை - தமிழ்தான்  புரியும் என்று போராடிட - மாற்றத்தை வலியுறுத்த முன்வருவீர்களா?
 

3. உங்கள் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வகையறாக்களின் வீடுகளில் தமிழிலேயே விவாக சுப முகூர்த்தத்திற்குப் பதில், தமிழிலேயே திருமணம் - வள்ளுவர் கூறிய வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடத்தி - சமஸ்கிருத மந்திரங்களுக்கு விடுமுறை கொடுத்து செய்வதற்கு முன்வருவீர்களா?

 

4. அதையே கருமாதி - சிரார்த்தம் என்ற திதி போன்றவைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாரா?

 

5. சமஸ்கிருத பாரதி என்பதை நிறுத்தி, இனி வாழும் தமிழ் - செம்மொழி பரப்புதலை இந்தியா முழுவதும் இதைச் செய்து தங்களது திடீர் தமிழ்க் காதல் உண்மையானது என்று உலகுக்கு நிரூபிக்க முன்வருவீர்களா?
 

k.veeramani


குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களின் பெயரை தமிழ்ப்படுத்தி அழைப்பீர்களா? காரியவாக், சர்சங் சலாக், ஷாகா, பிரதிநிதி சபா என்பதெல்லாம் மாற்றப்படுமா?
அதற்கு வழி என்ன?
 

ஒப்பனை கலைய சில மணிநேரம் போதும்.


புதிய தலைமுறை எம் இணைய இளைஞர்கள் உனது சூழ்ச்சி வலையை அறுத்து எறிந்து வெளியே வருவார்கள், அது உறுதி!
 

இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்