Skip to main content

2022ஆம் ஆண்டு: பரபரப்பை ஏற்படுத்திய பேரறிவாளன்… பில்கிஸ் பானோ தீர்ப்புகள்!

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

Year 2022: Sensational Perarivalan… Bilgis Bano Verdicts!

 

2022 ஆம் ஆண்டில் மக்களுக்கான நீதியை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் இரண்டு வழக்குகள் தொடர்பான விடுதலை முடிவுகள் பெருத்த விவாதத்தை நாடு முழுக்க ஏற்படுத்தின.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்த தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், தமிழக அமைச்சரவையும் உடனடியாக 7 தமிழர்களையும் விடுதலை செய்யலாமென தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அந்த தீர்மானத்தைக் கிடப்பில் போட்டார்.

 

இந்நிலையில், பேரறிவாளன் மீண்டும் தனது விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட, இம்முறை, அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கவர்னர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததையும், பேரறிவாளனின் உடல் நலம், நன்னடத்தை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக முதல்வர், வைகோ, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பைப் பதிவு செய்தது.

 

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையின்போதும் ஆளுநர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதன் மூலம் ஆளுநரின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

 

Year 2022: Sensational Perarivalan… Bilgis Bano Verdicts!

 

இதேபோல் குஜராத் மாநிலத்தில், 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தால் 2000 பேர் வரை கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் போது, ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதில் மற்றவர்கள் இறந்துவிட பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரும் அவரது குழந்தையும் மட்டும் உயிர்பிழைத்தனர்.

 

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானோ, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே தொடர்ச்சியாக சட்டப்போராட்டம் நடத்தி, கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மனம் குமுறிய பில்கிஸ் பானோ மேல்முறையீடு செய்ய, அதில் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த குஜராத் அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில்தான் குற்றவாளிகளை விடுதலை செய்தோமென்று தெரிவித்தது. இந்த விடுதலைக்கெதிராக ஓவைஸி, ராகுல் காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண்களுக்கு ஆதரவான சமூக அமைப்புகளும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

- தெ.சு.கவுதமன்

 

 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.