Skip to main content

சோஷியல் டிஸ்டன்ஸ்ஸை மறந்த போலீசார்! - காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020

 

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க.வை எதிர்த்தும், குதிரை பேரம் நடப்பதைக் கண்டித்தும் சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக இன்று (27.07.2020) காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதன்படி, இன்று ராஜ்பவனை முற்றுகையிடுவதற்கு பதிலாக, சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ஆனந்தபவன் ஹோட்டல் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர்கள் டாக்டர் ஜெயக்குமார் எம்.பி, வசந்தகுமார் எம்.பி., டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி., மற்றும் மாவட்ட காங்கிரஸ்  தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், கே. வீரபாண்டியன் மற்றும் கட்சியினர் என சுமார் 130 பேர் கலந்து கொண்டனர். 

 

ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அனுமதியின்றி கண்டன முழக்கங்களுடன் பேரணி நடத்த முயன்ற கதர்சட்டையினரை போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் செல்ல மூன்று பேருந்துகள் மற்றும் இரண்டு சிறிய போலீஸ் வேன்களை வரவழைத்திருந்தனர் போலீசார். கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம்  அமலில் இருப்பதால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறது எடப்பாடி அரசு. அதன்படி, ஒரு வேனில் அதிகபட்சம் 10 பேர் அமர வைக்கலாம். ஆனால் அந்த வேனில் 30 பேரை திணித்து ஏற்றியுள்ளனர் போலீசார். இதேபோல் சமூக இடைவெளியுடன் 20 பேரை அமர வைக்கக்கூடிய பேருந்தில், 50-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றியுள்ளனர். குதிரை பந்தயம் நடக்கும்  கிண்டி எம்.ஆர்.சி. யில் காங்கிரசாரை அடைத்து வைத்திருந்தனர் போலீசார்.  

 

'குதிரை பேரத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால் குதிரை பந்தயம் நடக்கும் இடத்தில் நம்மளை அடைத்து வைக்கிறது போலீஸ்' என காங்கிரஸ் செயல் தலைவர்கள் கமெண்ட் செய்ய, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கலகலப்பு உருவானது. மாலை 3.30 மணி அளவில் அவர்களை விடுதலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளை காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. 

 

விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சிலர் போலீசாரிடம், "சோஷியல் டிஸ்டன்ஸ்ன்னு சொல்றீங்க, எங்களை மூட்டை திணிக்கிற மாதிரி ஏத்திக்கிட்டு வந்திருக்கீங்க. ஆட்டோவுல ஒருத்தர்தான் போகலாம், கார்ல ரெண்டு பேர்தான் போகலாமுன்னு சொல்றீங்க. அதை மீறினா கேஸ் போடுறீங்க. ஆனால் நீங்களே எங்களை இப்படிப் புளி மூட்டை மாதிரி ஏத்தலாமா? எக்ஸ்ட்ரா பஸ் வரவழைச்சிருக்கணும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா?" என்று போலீசாரை கேட்டிருக்கிறார்கள்.  

 

இதற்குக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத போலீசார், "நீங்க ஆர்ப்பாட்டத்துல எப்படி இருந்தீங்கன்னு எல்லோருக்கும் தெரியும். சோஷியல் டிஸ்டன்ஸ் பத்தி நீங்க பேசாதீங்க" ன்னு பதிலடி தந்ததில் கதர் சட்டையினர் கப்-சிப்பாகி விட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.