யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ அதே ஆட்களோடு சேர்ந்து எடப்பாடி அரசை கவிழ்க்க ஒபிஎஸ் திட்டமிட்டார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே, அவருடைய சமாதியின் ஈரம் காய்வதற்கு முன்னரே அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை முன்மொழிந்து சின்னம்மாவாக காலில் விழுந்து அடுத்த ஜெயலலிதாவாக அறிமுகம் செய்தவர் ஒபிஎஸ். முதல்வர் பதவியை சசிகலா பறி்த்ததும், சசிகலா குடும்பத்துக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தர்மயுத்தம் தொடங்கினார்.

சசிகலா சிறைக்கு சென்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார். அதன்பிறகு தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். அதையும் கடுமையாக விமர்சித்தவர் ஒபிஎஸ். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் மத்திய அரசு உதவியோடு தினகரனுக்கு எதிராக பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. தினகரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்போதே, சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. ஒபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் 2017 ஆம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இணைந்தது. அதைத்தொடர்ந்து ஒபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தையும் பெற்றார்கள். ஆனால், அதற்கு முன்னதாக இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் சிறைக்கு சென்றார்.

ஆனால், அந்த இணைப்புக்கு 40 நாட்கள் முன்னரே, எந்தக் குடும்பத்தினரை எதிர்த்து ஒபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, அதே தினகரனை 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் சந்தித்து எடப்பாடி அரசை கவிழ்த்துவிட்டு, தன்னை முதல்வராக்கினால் தினகரனுக்கு விசுவாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்தத் தகவலை ஒரு விவாத நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவாளரான தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த தகவலை மறுக்காத ஒபிஎஸ், அதெல்லாம் பழைய கதை என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் ஒபிஎஸ்சும் அவருடைய மகனும் தன்னை சந்தித்தது உண்மைதான். அதை அவரால் மறுக்க முடியாது. அதில் சில அரசியல் ரகசியம் இருக்கிறது. அதனால்தான் நான் அதை வெளியில் சொல்லவில்லை. தினகரன் முதல்வர் பதவிக்காக அலைகிறார். இப்போதும்கூட ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் ஆளுக்கொரு கத்தியை மறைத்துக்கொண்டே அரசியல் செய்கிறார்கள் என்று தினகரன் பேட்டியளித்தார்.

ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகம் கடந்த சில மாதங்களாகவே சிரிப்பாய் சிரிக்கிற நிலைக்கு போய்விட்டது. மத்திய அரசில் ஒபிஎஸ்சுக்கு இருந்த மரியாதை சுத்தமாக போய்விட்டது. தொடக்கத்தில் ஒபிஎஸ்சையும், இபிஎஸ்சையும் அடிக்கடி சந்தித்த மோடி, இப்போதெல்லாம் தனது ஏஜெண்டான ஆளுநரைப் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் மாநில நிர்வாகத்தை பாஜகவின் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில்தான், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒபிஎஸ்சின் தர்மயுத்தம் நாடகத்தின் மர்ம காட்சி அம்பலம் ஆகியிருக்கிறது.