Skip to main content

"மூன்று நாளில் ஆறு துறைகளின் பொறுப்பை பறித்த ஜெயலலிதா; வேறு ஒருத்தனா இருந்தா தூக்குப்போட்டு தொங்கியிருப்பான்..." - கதகளி ஆடிய நாஞ்சில் சம்பத்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

jh


ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியான ஆறுமுகசாமி அறிக்கை நேரடியாகவே சசிகலாவைக் குற்றம் சாட்டியுள்ளது. அவர் நினைத்தால் ஜெயலலிதாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்ற பதத்தில் அந்த அறிக்கையில் ஆறுமுகசாமி கருத்து தெரிவித்திருந்தார். எடப்பாடி அணியில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவைக் குற்றம்சாட்டி பேசிவரும் சூழ்நிலையில், ஆறுமுகசாமி அறிக்கையை அடிப்படையாக வைத்து  திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " இன்றைக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை எடப்பாடி மீதும், சசிகலா மீதும் கூறும் கே.பி.முனுசாமி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஓரே நேரத்தில் ஆறு துறைக்கு அமைச்சராக இருந்தார்.

 

முதல் நாள் ஒரு துறையை ஜெயலலிதா பிடுங்குகிறார், அடுத்த நாள் அடுத்த துறை, அதற்கடுத்த நாள் மற்றொரு துறையைப் பிடுங்கிக் கொள்கிறார். ஒவ்வொன்றாய் பிடுங்கிக்கொண்ட போதும் அவர் உயிரோடுதான் இருக்கிறார். வேறு யாராவது இருந்தால் தூக்கில் தொங்கியிருப்பான். சில நாட்கள் இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கிறார். பிறகு அந்த அமைச்சர் பதவியையே பறிக்கிறார். அடுத்த சில நாட்களில் மாவட்டச் செயலாளர் பதவியையும் எடுத்துவிட்டார். எதற்காக ஜெயலலிதா இப்படிச் செய்தார் என்று சொல்லட்டுமா? இவரின் யோக்கிதை என்ன என்று அப்போதுதான் அனைவருக்கும் தெரியும். 

 

சொந்தக் கட்சிக்காரனைத் தோற்கடிக்கத் தேர்தலில் மாற்றுக் கட்சியினரோடு இணைந்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக அவரின் கட்சிப் பதவியைத் தவிர அனைத்தையும் பிடுங்கி எறிந்தார் ஜெயலலிதா. அவர் தற்போது உத்தமர் போல் பேசுகிறார். ஜெயலலிதா மரணம் அடைந்தபோது எடப்பாடி முதல்வராக சசிகலாவால் ஆக்கப்பட்டபோது இவர் எதிர்க்க வேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பின்னால் இப்போது அணிவகுத்து நிற்கிறார். அரசியல் அநாதையாக இருந்த இவரை யார் அரவணைத்து அடைக்கலம் கொடுத்தது. 

 

அண்ணன் பன்னீர்செல்வம் தானே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தார், அது பத்தாது என்று சட்டமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்குக் கொடுத்தார். அவர் கொடுத்த பதவியில் அமர்ந்துகொண்டு இன்று வீர வசனம் பேசுகிறார். அதிமுக தொண்டனுக்கும், கட்சிக்கும் துரோகம் செய்த துரோகி இந்த கே.பி.முனுசாமி அவரெல்லாம் யாரைப் பற்றியும் குறை சொல்லிப் பேசத் தகுதியில்லாதவர். அவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம், இவர் நினைத்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறுவதெல்லாம் பேசுவதற்குக் கூட வகையில்லாத வார்த்தைகள். மனதுக்குத் தோன்றியதை அறிக்கை என்று இந்த ஆணையம் கொடுத்திருக்கிறது. அதை நாம் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு வேலையைப் பார்க்க வேண்டியது தான்.

 

சசிகலாவுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது. அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் உறவு சரியில்லை என்று கேள்வி எழுப்புவதற்கு நீங்கள் யார்? சசிகலாவின் திருமணப் பத்திரிகை தங்கத்தை இணைத்து உருவாக்கப்பட்டது. அவரின் கணவர் நடராஜன் தமிழ்நாட்டின் முதல் பிஆர்ஓ, இந்தி எதிர்ப்பு போராளி, ஈழ விடுதலைக்காகக் கடைசி மூச்சு உள்ள வரை பாடுபட்டவர். வாழ்நாளில் கடைசியில் கூட முள்ளி வாய்க்கால் முற்றம் அமைத்துக் கொடுத்தவர். எனவே கேள்வி யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். பதில் தெரிந்தவர்கள்தான் கூறமுடியும். அந்த வகையில் ஜெயலலிதா சசிகலா உறவு சரியில்லை என்று கூறுவதற்கு நீங்கள் யார் ? உங்களிடம் ஜெயலலிதா மரணத்துக்கு முன்பு சொன்னாரா? பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகாது.


 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.