Skip to main content

மோரிஸ் வாழைப்பழம் - அதிரவைக்கும் உண்மைகள்!

Published on 03/03/2018 | Edited on 03/03/2018

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமும் சாப்பிட உகந்த பழமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது வாழை.  தமிழ்நாட்டில் உணவாக மட்டும் பார்க்கப்படாமல், பாரம்பரியமாக ஒரு தெய்வீக சடங்குப் பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது வாழைப்பழம். வாழை மரத்தின் இலை, காய், பூ, மட்டை, நார் என அனைத்துமே வியாபாரப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும்,  சந்தைப்படுத்துதலிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றது. ஆனால் கலப்படம் எந்தப் பொருளை விட்டது? வாழையையும் விட்டு வைக்கவில்லை.

வாழைப் பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், நார்சத்து  போன்ற உடலுக்கு வளம்சேர்க்கும் பல சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த நமது பாரம்பரிய வகைகளான பூவாழை, செவ்வாழை, மொந்தன் வாழை, பச்சை வாழை, கற்பூரவள்ளி போன்ற அனைத்தையும் மீறி இன்று நகரங்களில் இருக்கும் அனைத்து கடைகளிலும் நம் கண்ணைப் பறித்து அழைக்கிறது 'பளபள'வென பச்சை கலந்த மஞ்சள் நிற மோரிஸ் பழம்.

morris banana

ஆம்.. மோரிஸ் எனும் வாழைப்பழ ரகம் ஏற்கனவே நாம் அறிந்த ரகமே. ஆனால் இந்த பெயரை ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாள்  கேட்டிருக்கக்கூடமாட்டோம். பெங்களூர் வாழைப்பழம் என்று அழைக்கப்படும் இந்த வகை வாழைப்பழம் ரயில்வே வாழைப்பழம் என்றும்  அழைக்கப்பட்டு வந்தது. ஆரம்ப காலகட்டத்தில்  ரயில் நிலையங்களில் மட்டும் அதிகமாக விற்பனைக்கு வந்ததால் அப்பெயர் கொண்டது. ஆனால்  இன்றோ  பெட்டிக்கடைகளிலும் இடம்பிடித்துவிட்டது இந்த வகை வாழைப்பழம். பார்க்க மிகவும் பளபளப்பாகவும் கவரும் வகையிலுள்ள  இந்த வாழையில் பெரும் ஆபத்துகள்  மறைந்திருக்கின்றன என்று சொல்லிவருகிறது மருத்துவ உலகம். 

பார்க்க வனப்பாக மற்ற வாழைகளை விட செழுமையான தோற்றத்தில் காணப்படும் இந்த வாழை, இயற்கை ரகம் அல்ல. வாழை என்ற சொல்லோடு சேர்ந்தது 'வாழையடி வாழை', அதாவது ஒரு வாழைமரத்தின் கீழே அதைச்சார்ந்து வரும் சிறு கன்றுகளை எடுத்து நடவு செய்வதே பாரம்பரிய நடவு முறையாகும். ஆனால் இந்த மோரிஸ் வாழைகள் திசு வளர்ப்பு எனும் முறையில் நடவு செய்யப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட  ஒரு வாழையாகும்.

morris banana

இந்தத்  திசு வளர்ப்பு முறையில் விளைவிக்கப்படும் இந்த வாழை நம் ஊரைச் சேர்ந்த விவசாயிகளால் வளர்க்கப்படுபவை அல்ல. காப்புரிமை (copy  rights ) பெறப்பட்ட வெளிநாட்டிலுள்ள மான்சாண்டோ என்ற ஒரு  பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த மோரிஸ்வாழை.  இந்த நிறுவனத்திடம் அதிக பணம் கொடுத்து  வியாபார உரிமை பெற்றவர்கள் தான் இந்தியாவில்  விற்க ஆரம்பித்தார்கள். அந்த பன்னாட்டு நிறுவனத்திடம் வியாபார உரிமை பெற்ற சில நிறுவனங்கள் இந்தியாவில் மோரிஸை உற்பத்தி செய்கின்றன. நம்மூர் விவசாயிகள் பயிர் செய்யும்  நாட்டுவாழைப் பழங்களின் விளைச்சல், விலை வீழ்ச்சியால் இந்த  திசுவளர்ப்பு வாழைகள் நாட்டு வாழைகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ளன.

அப்படி என்னதான் கெடுதல் ஒளிந்துள்ளது இந்த மோரிஸ் வாழையில்? திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் மோரிஸ் வியாபார நோக்கிற்காக மட்டுமே விளைவிக்கபட்ட வாழை வகை. இதன் உருவாக்கத்தில் கரப்பான் மட்டும் காட்டுப் பூச்சிகளின் ஜீன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாம். வாழையில் பூச்சிகளால் வரும்  தண்டழுகல் நோயை கட்டுப்படுத்தி விளைச்சலை துரிதப்படுத்தி பொருளாதார  நோக்கத்திற்காக மட்டுமே உருவான இந்த மோரிஸ் வாழை, ஒரு பழமே இல்லை, தாவரத்திற்கும் விலங்கிற்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம் என்றும் மருத்துவ உலகில் கூறப்படுகிறது. 

ஒவ்வாமை, தோல் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பல பாதிப்புகளை இந்த வாழை ஏற்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்மை குறைவு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் உடல்நலம் பாதிக்கபட்டவர்களும் குழந்தைகளும் இந்த  மோரிஸ் பழங்களை சாப்பிடுவதை  முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இவ்வளவு தீமைகள் தரக்கூடிய ஒரு பழ வகையை மத்திய அரசின் திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கி வருகிறது என்பதே பெரிய அதிர்ச்சியாகும். பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்படும், உடல் நலம் கெடுக்கும் இந்த வகை வாழைகளைத் தவிர்ப்போம்.  இயற்கை பயிர் செய்தலை ஆதரிப்போம், இனி வாழையடி வாழையாக.....