Skip to main content

"குஜராத் விபத்துக்கு ஸ்டாலின்தான் காரணம் என்று அண்ணாமலை கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது..." - மருத்துவர் காந்தராஜ்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

தக

 

கோவை  சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தமிழக அரசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த சம்பவம் தமிழக உளவுத்துறையின் தோல்வி என்று விமர்சித்த அவர், இந்த சம்பவத்துக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

 

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை அலட்சியமாக இருந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற உடனே என்ஐஏ விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் ஆளுநர் விவகாரம், வி.பி.துரைசாமி விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அரசியல் விமர்சகர் காந்தராஜிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழக அரசியல் ரொம்ப மோசமாகப் போய் இருக்கும். அதை அவ்வாறு போகாமல் சரி செய்ததே அண்ணாமலையும், தமிழக ஆளுநரும் தான் என்று பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளாரே? 

 

வி.பி.துரைசாமிக்கு ஏதோ கெட்ட நேரம் வந்துவிட்டது போலத் தெரிகிறது. அவர் பாஜகவிலிருந்தாலும் அவரை மாநில பாஜக முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் அவர் திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர். அவருக்கு பாஜகவெல்லாம் சரி வராது. தன் மீது வந்துள்ள இந்த சந்தேகத்தை அவர்களுக்கு எப்படி போக்கலாம் என்று நினைத்த அவர், திமுக மீது புழுதி வாரித் தூற்றுகிறார். ஆனால் இதையெல்லாம் வைத்து அவரை பாஜக முழுவதுமாக நம்பாது என்பதை அவருக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதில் பார்க்கவேண்டிய முக்கிய அம்சம், பாஜக அவரை நமக்குள்ளார ஊடுறுவி உள்ள ஒரு சக்தியாக பார்க்கிறது. நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று நினைக்கிறது. அதனால் இவர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி அவர்களை நான் அப்படி இல்லை என்று ஏமாற்ற பார்க்கிறார்.


ஆளுநரை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் விமர்சிப்பதால் ஆளுநர் சரியாகச் செயல்படுவது உறுதி செய்யப்படுகிறது. அவரை அரசியல் நோக்கத்திற்காகவே திமுக விமர்சனம் செய்து வருகிறது, இதனால் ஆளுநரை நான் பாராட்டுகிறேன் என்று அண்ணாமலை கூறுகிறாரே? 

 

வேறு யார் பாராட்டுவா? வேலிக்கு ஓணான் சாட்சி. இவரை அவர் பாராட்டுவதும், அவரை இவர் பாராட்டுவதும் தான் தொடர்ந்து நடைபெற்று வரும். இவர்களை வேறு யார் பாராட்டுவார்கள். நடுநிலையாக இருப்பவர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். இரண்டு கோமாளிகள் இங்கே வந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்களே என்று அவர்கள் வருத்தப்படுகிறார்கள், அதையும் தாண்டி கோமாளிகளை நாம் கேவலப்படுத்தக்கூடாது என்பதும் மிக முக்கியம். அண்ணாமலை பேசுவதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? வாயில் என்ன வருகிறதோ அதையெல்லாம் கோமாளித்தனமாகப் பேசுகிறார். 

 

அவர் அறிவுப்பூர்வமாகப் பேசி நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா, நான் இதுவரை பார்த்தது இல்லை. அவர் வேறு ஒன்றைப் பேசுவார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். குஜராத் பாலம் இடிந்து விழுந்ததற்கும் ஸ்டாலினுக்கும் தொடர்பு இருக்கு என்று கூறுவார் என்று நினைத்தேன். திமுக ஆளுங்க அங்கே பரவி இருக்கிறார்கள், அதனால் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த அந்தப் பாலத்தை இடித்துவிட்டார்கள் என்று அண்ணாமலை கூறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சொல்லவில்லை. இது எனக்குப் பெரிய ஆச்சரியமாக உள்ளது. அதையும் ஆமாம் என்று சொல்லி ஆளுநர் ஏற்றுக்கொள்வார் என்று நினைத்தேன். ஆனால் இருவரும் அவ்வாறு சொல்லவில்லை. சற்று ஆச்சரியமான ஒன்றுதான்.


 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.