Skip to main content

மகனுக்கு மந்திரி பதவி வாங்கினால்,அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இருக்க மாட்டார்!

Published on 07/06/2019 | Edited on 07/06/2019

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், அ.தி.மு.க. கூட்டணியில் பயங்கரமான விரிசலை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க.வே அடுத்து என்ன ஆகும் என கதிகலங்கிப்போய் நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

 

ops



ஒரு காரின் கண்ணாடி உடைந்ததுபோல் இருக்கிறது அ.தி.மு.க. கார் கண்ணாடி என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல் உடனே உடைந்துவிடாது. கார் கண்ணாடி உடைந்தாலும் அது உடனடியாகத் தெரியாது. காரில் ஏற்படும் சிறு அசைவுகள் உடைந்த பலமணி நேரம் கழித்து கார் கண்ணாடியை உப்புக் கற்களைப் போல கொட்ட வைத்துவிடும். அ.தி.மு.க. என்கிற கார் கண்ணாடியை உடைத்திருப்பது மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தொடர்பாக நடந்த போராட்டங்கள்தான் என்கிறார்கள்.

 

ops



நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை நடந்துகொண்ட விதம், அமித்ஷாவுக்கும் மோடிக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியது என்கிற கருத்தை ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் மறுத்திருக்கிறார் அமித்ஷா. "அ.தி.மு.க. எதிர்ப்பலையால் பா.ஜ.க. இங்கே ஜெயிக்க முடியவில்லை' என்கிறார் குரு மூர்த்தி. ஏற்கனவே மாநில ஆட்சியாளர்களை இம்போடென்ட்  என்ற குருமூர்த்தியின் கருத்துக்குப் பதில் பேசாதது போலவே அ.தி.மு.க.வினர் மவுனம் சாதித்தாலும் குருமூர்த்தியின் இந்தக் கருத்து பா.ஜ.க.வின் தலைமையில் எதிரொலித்திருக்கிறது.

 

eps



தமிழ்நாட்டிற்கு மோடி வந்தபோது கூடிய பெருங்கூட்டம் ஏன் வாக்குகளாக மாறவில்லை என மோடி கேட்கும் கேள்விக்கு அமித்ஷாவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. "தமிழகத்தில் எனக்கெதிரான அலை வீசியது என்பது உண்மையென்றால், நான் இந்தியாவில் மற்ற இடங்களில் பேசிய கூட்டங்களை விட அதிகமான மக்கள் திரள் தமிழகத்தில் பேசிய கூட்டத்திற்கு எப்படி வந்தது' என மோடி கேட்ட கேள்விக்கு தமிழக பா.ஜ.க.வினர் பதிலளித்துள்ளனர். அந்தப் பதில், புதிய அமைச்சரவை குறித்து கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தது.

 

admk



எடப்பாடி பழனிச்சாமி, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு சற்று முன்புவரை தம்பிதுரை அன்வர்ராஜா ஆகியோரை பா.ஜ.க.விற்கு எதிராகப் பேசவைத்தார். அத்துடன் எடப்பாடி, "பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது' என கோரிக்கை வைத்தார். அவரது விருப்பத்திற்கு மாறாக சட்டமன்ற இடைத்தேர்தலை இரண்டுகட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த இடைத்தேர்தலுக் கேற்றவாறு பா.ஜ.க.வை கேட்காமலே பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தார். அத்துடன் எடப்பாடியின் முழுக் கவனமும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே இருந்தது. பா.ஜ.க. எட்டு எம்.பி. தொகுதிகளைக் கேட்டது. அதை தர மறுத்தார். பா.ஜ.க. போட்டி போட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் வேலை செய்யவில்லை. அ.தி.மு.க.வின் வாக்குகளும் பா.ஜ.க.விற்கு விழவில்லை. இவ்வளவு குழிபறிப்பு வேலைகளையும் செய்த எடப்பாடி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மந்திரிசபையில் இடம் கேட்கிறார். அ.தி.மு.க.வை சேர்க்கவே கூடாது என கடும் கண்டனத்தை தமிழக பா.ஜ.க. அகில இந்திய தலைமையிடம் பதிவு செய்தது.


தமிழக பா.ஜ.க.வின் எதிர்ப்பு அதுவரை மத்திய மந்திரிசபையில் வைத்திலிங்கத்திற்கும், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கும் இடம் என பேசிவந்த பா.ஜ.க. மேலிடத்தின் குரலை மாற்றி விட்டது. "ஒரு இடம்தான், அதுவும் தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மகனுக்குத்தான் தரவேண்டும்' என ஆடிட்டர் குருமூர்த்தியின் குரலை பா.ஜ.க. எதிரொலித்தது. உடனே கேரள கவர்னர் சதாசிவம், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் பேசினார்கள். "ஓ.பி.எஸ்.ஸின் மகன் மட்டும் மந்திரியாகக்கூடாது' என்ற சதாசிவம், ஜக்கி ஆகியோரின் குரல் முதலில் எடுபடவில்லை. ஓ.பி.எஸ். மகனுக்கு பா.ஜ.க. மந்திரியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் அ.தி.மு.க.வில் மோதல் பெரிதானது.


அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் துணையுடன் ஓ.பி.எஸ்.ஸுடன் நேரடியாக மோதினார் எடப்பாடி. இந்த மோதல் மிகக்கடுமையாக நடந்தது. ஒரு கட்டத்தில் தேனியில் வெற்றிபெற்ற ஒரேயொரு எம்.பி.யான ரவீந்திரநாத்குமார் பா.ஜ.க.வில் சேருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்கிற அளவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். "பா.ஜ.க.வில் சேர்ந்து ஓ.பி.எஸ். மகன் மந்திரி பதவி வாங்கினால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பி.எஸ். இருக்க மாட்டார். அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவோம்' என எடப்பாடி தரப்பிலிருந்து எதிர் சவால் விடப்பட்டது. தேர்தல் முடிவு வந்தவுடன் தமிழகத்தில் கூட்டணி பிளவு வரவேண்டாம் என நினைத்த பா.ஜ.க., அமைச்சரவையில் அ.தி.மு.க. வைச் சேர்க்கும் எண்ணத்தையே கைவிட்டது'' என அமைச்சரவை உருவாக்கத்தின்போது அ.தி. மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்த மோதலைச் சொல்கிறது டெல்லி வட்டாரம்.

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.