Skip to main content

"என் முகத்தைப் பார்த்துதான் தமிழக மக்கள் சாப்பிடவே செல்வார்கள் என்று அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார்..." - புகழேந்தி அட்டாக்

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

jkl

 

தமிழக அரசியல் தொடர்ந்து பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கைகள், தமிழக முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டு என்று தொடர்ந்து பரபரப்பு குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனத்தில் பெரிய அளவிலான தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவருக்கே உரிய அதிரடி நடையில் பதிலளித்துள்ளார்.

 


தமிழகத்தில் தான் ஆளுநராக இருந்தபோது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்துக்கு 40 கோடி முதல் 50 கோடி வரை பணம் வாங்கப்பட்டது எனத் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் மறுத்துள்ள நிலையில் அவர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்தைக் கிளப்பி வருகின்றது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

இந்தக் குற்றச்சாட்டை யார் கூறியது என்று முதலில் நாம் பார்க்க வேண்டும். இதை தமிழக முதல்வராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்களோ, அண்ணன் பன்னீர்செல்வமோ, திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் தோழர்களோ கூறவில்லை. இந்தக் குற்றச்சாட்டை கூறியவர் மத்திய அரசால் ஆளுநராக நியமிக்கப்பட்டு தமிழகத்தில் பணியாற்றியவர். தற்போதும் ஆளுநராக வேறு மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது எதற்காக அவர் இதைக் கூற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. பஞ்சாப்பில் இதே போன்று சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் இதே போன்ற ஊழல் நியமனங்கள்...தான் ஆளுநராக இருந்தபோது நடைபெற்றது, அதற்கு அப்போது ஆட்சியிலிருந்தவர்களுக்கு தொடர்பு இருந்தது  என்று கூறியுள்ளார்.

 

அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார், எடப்பாடி பழனிசாமி. அதில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நியமனங்களில் இவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்றால் அதற்கு இவர்கள்தானே பொறுப்பு. லஞ்சப்பணம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் 27 பேர் வேந்தராக நியமிக்கப்பட்டதில் இவர்களுக்கு எத்தனை கோடி பணம் கிடைத்திருக்கும். பல்கலைக் கழக வேந்தர் நியமனத்தில் மாபெரும் ஊழலை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது என்பது பட்டவர்த்தனமாக தற்போது தெரிய வந்துள்ளது. இதற்கான தண்டனையை இவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். பன்வாரிலால் சொல்கிறார் என்றால் மத்திய அரசே இவர்கள் மீது குற்றம் சாட்டுகிறது என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஊழல் பெருச்சாளிகள் விரைவில் மக்கள் முன்பு அம்பலப்பட்டு விடுவார்கள்.

 

இவர்கள் தமிழக மக்களை மட்டுமா ஏமாற்றினார்கள். தேர்தலுக்கு முன்பு சென்னை வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரிடமும் பேசி தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரிந்திருப்பது தோல்விக்கு வழிவகுக்கும், புலனாய்வு செய்திகள் அதை ஒத்தே இருக்கிறது என்ற எச்சரிக்கையைக் கொடுத்தார். அப்போது அண்ணன் ஓபிஎஸ் கூட அனைவரும் ஒன்றாக இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்போம். இணைந்து செயல்பட்டால் தான் வெற்றி வசப்படும் என்று ஓப்பனாக சொன்னார். இதை அமித்ஷாவும் ஆமோதித்தார்.

 

ஆனால் எடப்பாடி பழனிசாமி, அய்யயோ...அப்படி எல்லாம் இல்லை. தமிழக மக்கள் என்னைப் பார்த்துத்தான் சாப்பிடவே செய்கிறார்கள், என்னைப் பார்த்துத்தான் எழுந்திருக்கிறார்கள், நான்தான் எல்லாமாக இருக்கிறேன். நான் தனியாக நின்றே பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவேன். புத்தன், ஏசு, காந்தி வரிசையில் என்னைத் தமிழக மக்கள் நினைக்கிறார்கள் என்று கூறி அமித்ஷாவுக்கு காதில் பூ வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதையும் தாண்டி எம்ஜிஆர் எல்லாம் சும்மா நான் அதற்கு மேல், 150 சீட்டை தட்டி தூக்கி விடலாம் என்று பொய்யை அளவில்லாமல் சொன்னவர்தான் இந்த பழனிசாமி. ஆனால் தேர்தல் முடிவுகள் யார் எம்ஜிஆர், யார் எடப்பாடி பழனிசாமி என்று காட்டிவிட்டது" என்றார்.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.