Skip to main content

என்னவெல்லாம் செய்தார் ஒடிஷாவின் மோடி??? பிம்பமும், உண்மையும்...

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

நேற்று முன்தினம் (மே 30) பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அப்போது அதிகமாக பேசப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி. மிகவும் எளிமையானவர், சைக்கிளில்தான் செல்வார், ஒடிஷாவின் நரேந்திரமோடி என்றெல்லாம் புகழ்ந்தனர். ஆனால் அந்த எளிமை, எளிமை என்ற புகழ்ச்சிக்கு பின்னால் இருக்கும் கொடூரம் அநேகருக்கு தெரியாது. 
 

pratap sarangi


64 வயதான அவர் சைக்கிளில் செல்கிறார், மண்வீட்டில்தான் வசிக்கிறார், பிரச்சாரத்தைகூட ஆட்டோவில் சென்றுதான் செய்தார். என்றெல்லாம் அவரின் எளிமையான பிம்பம் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்குபின் இருக்கும் கொடூரம் அந்த எளிமையான பிம்பத்திற்கு பின்னால் மறைந்துவிட்டது.

அவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள்... அவரின் மொத்தசொத்து 16.5 இலட்சம். கையிருப்பு தொகை 15,000. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, ஒதுக்கிவைத்தது உட்பட பல பிரிவுகளின்கீழ் குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

மார்ச் 2002, அந்த காலகட்டத்தில் அவர், பஜ்ரங் தள் என்ற அமைப்பின் மாநில தலைவராக இருந்தார். இந்த பஜ்ரங் தள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு கிளை அமைப்பாகும். அப்போது அவர் கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

 

 

pratap sarangi



இந்த கலவரம் அயோத்தியிலுள்ள ராமர் கோவில் இடத்தை ஒப்படைக்கவேண்டும் என்றுகூறி நடந்தது. சட்டமன்றத்தை தாக்க முயற்சித்த 500 பேர் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள். இதனால்தான் ஒடிஷா காவல்துறை அதிகாரிகள் இவரை கைது செய்தனர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக 1999 ஜனவரியில் நடந்த சம்பவம்தான் கொடூரமானது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாதிரியார் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் என்பவரையும், அவரது இரு மகன்களையும் (ஒருவருக்கு வயது 11, இன்னொருவருக்கு 7) எரித்து கொலை செய்தனர். இதற்கு மூளையாக, முக்கிய ஆளாக இருந்தது இந்த எளிய மனிதர்தான். அவர்கள் கிறித்துவ மதத்திற்கு கட்டாயமாக மாற்றியதாக அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த அரசு தரப்பு வழக்கறிஞர் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறித்துவ மிஷினரிகளுக்கு எதிராக சாரங்கி தலைமையிலிருந்த பஜ்ரங் தள் அமைப்பும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படியாக நடந்துள்ள பல வன்முறைகளை மறைப்பதற்காகத்தான் அவர் எளிமையானவர், சைக்கிளில் செல்பவர், நடந்து செல்பவர் என்பது போன்ற பிம்பங்கள் உண்டாக்கப்பட்டன.  
 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.