Skip to main content

ஸ்வப்னாவிடம் அதிமுக அமைச்சருக்கு தங்கம் வாங்கிய சர்மிளா? விசாரணையால் அமைச்சர் அதிர்ச்சி! தலையிட விரும்பாத EPS!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020
sharmila

 

 

ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பது கனவிலாவது நிறைவேறுமா என்பதுதான் நடுத்தர மக்களின் தற்போதைய நிலவரம். நாளுக்கு நாள் விலையேறிக் கொண்டே போகும் தங்கத்தில் முதலீடு செய்வதுதான், தாறுமாறாக பண வருவாய் உள்ளவர்களின் முதலீட்டுத் தொழில்நுட்பம். இந்த முதலீட்டை கவனித்து கொள்வதற்காகவே அனைத்தும் அறிந்த புரோக்கர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து தரமான தங்கத்தை வாங்கி தருவார்கள். தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கரோனாவிலும் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்... இவர்களின் அபரிமிதமான வருவாயில் பெரும்பகுதி அண்மைக்காலமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே தங்க முதலீட்டில் கவனம் செலுத்தியவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்கிறார்கள் சர்மிளா தரப்பினர்.

 

இந்த சர்மிளா பற்றித்தான் கடந்த நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவரது வில்லங்க வீடியோ அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்புக்கு நெருக்கடி தந்திருப்பதை அவரது நண்பரான டாக்டர் ஸ்ரீதர் வாயிலாக பதிவு செய்திருந்தோம். அது குறித்து மேலும் பல விவரங்கள் கிடைத்துள்ளன.

 

"குட்கா முதல் கரோனா வரை எதிலும் சிக்காமல் எல்லாவற்றிலும் வருமானம் தேற்றியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அதில் 240 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கித்தரும் வேலையை தனக்கு நெருக்கமாக அறிமுகமான சர்மிளாவிடம் கொடுத்திருந்தார் அமைச்சர். 100 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை 93 ரூபாய்க்கு வாங்கக்கூடியவர் சர்மிளா. மீதி 7 ரூபாய் அவருக்கு கமிஷன். 240 கோடி ரூபாய்க்கு கமிஷன் கணக்கு போடப்பட்டுதான் இந்த டீலிங் நடந்தது. அதன்படி தர வேண்டிய கமிஷனில், 17 கோடி ரூபாய் தரப்படவில்லை. இது பிரச்சனையான நிலையில்தான், அமைச்சரின் நட்பு வட்டத்திலும் சர்மிளாவுடன் அறிமுகத்திலும் உள்ள டாக்டர் நண்பர்களான செல்வராஜ், சித்தரஞ்சன் ஆகியோர் சமாதானம் பேசி, 3 கோடி ரூபாய் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மீதம் 14 கோடி ரூபாயைக் கேட்டுத்தான் சர்மிளா தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருக்கிறார். அது வராத நிலையில் தான், அவரிடமிருந்து வீடியோ வெளிவந்தது'' என்றவர்கள் அடுத்து சொன்ன தகவல்கள் பகீர் ரகம்.

 

sharmila

 

"கேரளாவைச் சேர்ந்தவரான சர்மிளா, தனது மாநிலத்தை சேர்ந்த நகைக்கடைகளான ஜாய் ஆலுகாஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியவற்றிலிருந்து தங்கம் வாங்கி தருவது வழக்கம். அமைச்சருக்கான தங்கம் முதலீட்டில் இரண்டு முறை, கேரள அரசியலை நடுங்க வைக்கும் ஸ்வப்னாவிடமிருந்து நகை வாங்கப்பட்டுள்ளதாக விஷயம் லீக் ஆகி புதிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஸ்வப்னாவின் தொடர்புகள் கேரள முதல்வர் அலுவலகம் வரை வலுவாக உள்ளதாக என்.ஐ.ஏ. தரப்பு தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் ஸ்வப்னாவுக்கு உள்ள தொடர்புகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்தது. அந்த ஸ்வப்னாவுக்கும் சர்மிளாவுக்கும் அறிமுகம் இருக்கிறது என்பதும் மத்திய உளவுத்துறை மூலமாக என்.ஐ.ஏ. கவனத்திற்கும் சென்றுள்ளது. என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையம் விரிவடையும்போது, ஸ்வப்னாவிலிருந்து சர்மிளா, சர்மிளாவிலிருந்து அமைச்சர் என அதன் கரங்கள் நீளும். இதனை அமைச்சரின் கவனத்துக்கு மட்டுமின்றி, முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகராக உள்ள சுனில்.

 

எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் தன் ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் என்.ஐ.ஏ. விசாரணை என்ற பெயரில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். விஜயபாஸ்கரின் துறை ரீதியான செயல்பாடுகளையும், அரசியல் களத்தில் முதல்வர் பதவிக்கு சாதிரீதியாக காய் நகர்த்துவதையும் எடப்பாடி ரசிக்கவில்லை. சட்டச் சிக்கல்கள் வந்தால் விஜய பாஸ்கரே எதிர்கொள்ளட்டும் என சொல்லிவிட்டாராம்.

 

தங்கம் முதலீடு விவகாரத்தில் ஸ்வப்னாவின் தொடர்புகள் இருப்பதையும், என்.ஐ.ஏ. விசாரிக்கும் நெருக்கடி ஏற்படும் என்பதையும் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். தனது டெல்லி தொடர்புகள் மூலமாக இதுகுறித்து விசாரித்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்.

 

சர்மிளாவுக்கு கமிஷன் வரவில்லை என்பதும், அதனால் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதும் முதற்கட்ட வீடியோ மூலம் தெரிந்துகொண்ட சில பார்ட்டிகள் அவரிடம் இது குறித்து பேசியதுடன், அவருக்காகப் பேசுவதாக அமைச்சர் தரப்பில் பேரம் நடத்தி, லாபம் பார்த்துள்ளன. இதில் நிறைய பணம் கைமாறியிருக்கிறது. ஆனால் சர்மிளாவுக்கு கமிஷன் போய்ச் சேரவில்லை. இதனால், அமைச்சர் தரப்பை தொடர்பு கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கான கமிஷன் உள்ளிட்ட உரிமைகளை வெளிப்படுத்த சர்மிளா தயாராகி வருகிறாராம்.

 

நாம் இது பற்றி அமைச்சரின் நண்பர்கள் வட்டாரத்தில் மேலும் விசாரித்தபோது, "அமைச்சருக்கும் சர்மிளாவுக்கும் நல்ல நட்பு உண்டு. அதனை இந்தப் படங்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்'' என்று சில ஃபோட்டோக்களைக் காட்டினார்கள். அந்த படங்கள் 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஊட்டி ஃபேர்ன் ஹில்ஸ் ராயல் பேலஸ் (Fern Hills Royal Palace) ஹோட்டலில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு படத்தில் நெருக்கமும் உரிமையும் நன்றாக தெரிந்தது.

 

sharmila

 

 

தன் நண்பர்கள் வட்டாரத்துடன் சர்மிளாவிடம் கலகலப்பாக அமைச்சர் இருக்கும் படங்களும் இவற்றில் உள்ளன. அமைச்சரின் குடும்பத்தாரையும் சர்மிளா அறிந்திருக்கிறார். அதனால், வாட்ஸ்ஆப் மூலமாக அவர்களிடமும் விவரங்களைத் தெரிவித்து, கமிஷனை செட்டில் பண்ணும்படி கேட்டு, அவகாசமும் கொடுத்திருக்கிறார் என்கிற விவரத்தை இருவரையும் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

 

கடந்த இதழ் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியானதுமே கோட்டை வட்டாரம் கிடுகிடுத்தது. முதல்வருக்கு உளவுத்துறையினர் நோட் போட்டு அனுப்பியுள்ளனர். தற்போது, அமைச்சரின் தங்க முதலீடு தொடர்பான சர்மிளா-ஸ்வப்னா லிங்க்கை தீவிரமாக தோண்டத் தொடங்கியுள்ளது மத்திய உளவுத்துறையும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வும். அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த பல ஃபைல்களை ஏற்கனவே டெல்லி தூசு தட்டி வைத்துள்ளது. 

 

-கீரன்

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.